மீண்டும் வரும் கிரேசி சிங்

2001ல் வெளியான ஆமிர்கானின் லகான் படத்தில் நடித்து அறிமுகமானவர் கிரேசி சிங். அப்படத்தின் மூலம் கிரேசிக்கு, பாலிவுட்டில் நல்ல கிரேஸி ஏற்பட்டது.
இதையடுத்து 2003ல் சஞ்சய்தத்தின் காதலியாக அவர் நடித்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ். சூப்பர் ஹிட் ஆகவே, கிரேஸி பெரிதும் பேசப்பட்டார். தொடர்ந்து அஜய் தேவ்கனுடன் கங்காஜல் படத்திலும் நடித்தார் கிரேசி.
அதன் பின்னர் படங்கள் எதிலும் கிரேசியைக் காண முடியவில்லை. இந்த நிலையில் பெரும் இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் நடிக்க வந்துள்ளார் கிரேசி சிங்.
தேஷ்துரோஹி மற்றும் அஸீமா என இரு படங்களில் நடித்து வருகிறார் கிரேசி சிங்.
ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்று கிரேசியிடம் கேட்டால், நல்ல படமாக வர வேண்டும் என காத்திருந்தேன். அதனால்தான் இடைவெளி விழுந்து விட்டது. அசமஞ்சமாக இருந்து விட்டேன் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
சினிமாவில் இன்று போட்டி அதிகம். ஆனால் அதுவும் நல்லதற்கே. போட்டி இருந்தால்தானே நாம் வளர முடியும் என்கிறார்.
தற்போது நடித்து இரு படங்களிலும் தனக்கு நல்ல கேரக்டர் என சந்தோஷம் தெரிவிக்கிறார் கிரேசி. தேஷ்துரோஹியில் கிரேசிக்கு ஆக்ஷன் ரோலாம். இப்படிப்பட்ட கேரக்டரில் இப்போதுதான் முதன் முதலாக நடிக்கிறேன். இப்படத்துக்காக நிறைய சண்டைப் பயிற்சி மேற்கொண்டுள்ளேன்.
எனது குணத்திற்கு சண்டையே ஒத்து வராது. ஆனால் நான் ஆக்ஷன் ரோலில் நடிக்கிறேன். அதுதான் இந்த கேரக்டரின் அழகே. ஒரு நடிகையாக என்ன வேடமாக இருந்தாலும் நடிக்க வேண்டும். அப்போதுதான் நாம் முழுமை பெற முடியும் என்பது கிரேசியின் கருத்து.
தேஷ்துரோஹியில் கிரேசிதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கமல்கான்.
இன்னொரு படமான அஸீமா, விருது பெற்ற ஒரிய கதையாம். கல்யாணத்திற்கு முன்பு வரை பட்டாம் பூச்சி போல சிறகடித்துப் பறக்கும் பெண், கல்யாணத்திற்குப் பின்பு வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்கிறாள். அதுதான் இப்படத்தின் கதை என்று கூறும் கிரேசி, இப்படத்தில் அழகான காதல் கதையும் அடங்கியுள்ளது எனறு புன்னகைக்கிறார்.


Click it and Unblock the Notifications











