பசுமை மராத்தான் - தொடங்கி வைத்தார் ஷ்ரேயா

ஈஷா அமைப்பு பசுமைக்கரங்கள் திட்டம் சார்பில் திருப்பூர் நகரில் நேற்று 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதன் தொடக்க விழா திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் நடந்தது.
விழாவுக்கு ஈஷா அமைப்பின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமை தாங்கினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல் மரக்கன்றை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவையொட்டி பொதுமக்கள் கலந்து கொண்ட பசுமை மராத்தான் ஓட்டம் நடந்தது. அதை நடிகை ஸ்ரேயா, மணி அடித்து தொடங்கி வைத்தார். அப்போது நடிகர் பிரகாஷ்ராஜ் உடன் இருந்தார்.
இந்த ஓட்டம், டவுன்ஹால் மைதானத்தில் இருந்து தொடங்கி, குமரன் ரோடு வழியாக திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் முடிந்தது.
ஆண்கள் பிரிவில், பல்லடம் கொசவம்பாளையத்தைச் சேர்ந்த சசிக்குமார் வெற்றி பெற்றார். இவருக்கு திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர் சங்க தலைவர் சாமியப்பன் பரிசு வழங்கி பாராட்டினார்.
பெண்கள் பிரிவில் கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீநிதி வெற்றி பெற்றார். இவருக்கு வளம் அமைப்பு கிருஷ்ணசாமி பரிசு வழங்கி பாராட்டினார்.
ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக ஷ்ரேயா பேசுகையில், மரத்தை வெட்டி காடுகளை அழிப்பதால் பூமியின் வெப்பநிலை மாறி விட்டது. ஒவ்வொருவரும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். மரங்களை வெட்டாதீர்கள். பாலித்தீன் பைகளை முடிந்தவரை உபயோகப்படுத்த வேண்டாம். காகிதப் பை, காகித கோப்பைகளை பயன்படுத்துங்கள். சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவுங்கள் என்றார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும்போது, திருப்பூர் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுகிறது. இங்கு போதுமான தொழில், வருமானம், வசதி வாய்ப்புகள் குறையில்லாமல் கிடைக்கிறது. ஆனால் ஆறுகள் வற்றி விட்டது. நிலத்தடி நீர் நூற்றுக்கணக்கான அடிக்கு கீழே போய்விட்டது. இதை யாரும் கவனிப்பது இல்லை.
நம்மைப்பற்றி பெருமை பேசியே, மெழுகுவர்த்தி போல் நாம் கரைந்து கொண்டிருக்கிறோம். பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு, சிறிய பிரச்சினைகள் தீர்வாக இருக்கும். சுற்றுச்சூழலை மேம்படுத்த மரக்கன்றுகள் நட்டு பராமரியுங்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











