இனி மொழி முக்கியமல்ல... நல்ல படங்களில் நடிப்பேன்! - அசின்
இனி மொழி, பணம் முக்கியமல்ல... நல்ல வாய்ப்புகள், படங்கள்தான் முக்கியம் என்கிறார் அசின்.
தமிழில் நம்பர் ஒன்னாக இருந்த அசின், மும்பைக்குப் போனார் பாலிவுட் படங்களில் நடிக்க. அவருக்கு முதல் படமே ஓஹோவென்று ஓட, தமிழ் படங்களில் நடிக்க மறுத்துவிட்டார்.
ஆனால் ஒரு படத்தோடு அவரது பாலிவுட் வெற்றி முடங்கிப் போனது. இரண்டாவது படம் தோல்வியடைந்ததும் அசினைக் கூப்பிட ஆளில்லாத நிலை. அந்த நேரத்தில் சல்மான்கானே மீண்டும் அசினை தனது ரெடி படத்தில் ஹீரோயினாக்கினார்.
இந்த நேரத்தில் விஜய்யுடன் நடிக்க காவலன் பட வாய்ப்பு வந்தது அசினுக்கு. இந்தியில் மார்க்கெட் சொல்லிக் கொள்கிறமாதிரி இல்லாததால், சட்டென்று ஒப்புக் கொண்டார் அசின். ஆனால் தடையை மீறி இலங்கை சென்று இந்திப் படப்பிடிப்பில் பங்கேற்று தமிழரின் வெறுப்பைச் சம்பாதிக்க கொண்டார்.
இந்த நிலையில் பல தடைகளை மீறி காவலன் படம் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளது.
இந்த வெற்றி குறித்தும் அடுத்த பட வாய்ப்புகள் குறித்தும் அசின் பேசுகையில், "தமிழ் படங்களுக்கு முழுக்கு போடப் போவதாகவும், இந்திப் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப் போவதாகவும் என்னைப் பற்றி வதந்திகள் பரவுகின்றன.
தமிழில் நான் நடித்த கஜினி படத்தை இந்தியில் எடுத்ததால் எனக்கு அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு படங்களை அங்கு முடித்துள்ளேன். இடையில் விஜய்யுடன் காவலன் படத்தில் நடிக்க அழைத்ததால் மீண்டும் தமிழுக்கு வந்தேன்.
இதில் எனக்கு வித்தியாசமான கேரக்டர் அமைந்தது. இது எனக்கு முக்கியமான படம். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். பணம், மொழி முக்கியமல்ல. கதை பிடித்து இருந்தால் நடிப்பேன்.
தமிழ் பட உலகை என்னால் மறக்க முடியாது. இங்கு இருந்துதான் நடிகையாக உயர்ந்தேன். நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. இங்குள்ள ரசிகர்கள் எனக்கு பிடிக்கும். இந்தியில் ரெடி படத்தில் தற்போது நடித்து வருகிறேன்.
இப்படம் மே மாதம் ரிலீசாகும். இனி அனைத்து மொழிப் படங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தருவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











