பஞ்சாயத்து செய்த அம்பரீஷ்-ரம்யா மீதான தடை ரத்து!

தமிழில் வெளியான குத்து, பொல்லாதவன் போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா. கன்னடத்தில் இவர் முன்னணி நடிகை. தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். காவிரிப் பிரச்சினையின்போது தமிழகத்தை விட கர்நாடகமே முக்கியம் என்று கூறி கன்னட திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்திற்கு எதிராக கோஷம் போட்டு கன்னடத் திரையுலகினரை குஷிப்படுத்தியவர்.
இவர் சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு புகார்களுக்கு ஆளாகிவந்தார். சமீபத்தில் இவருக்கும் கன்னட தயாரிப்பாளர் கணேஷுக்கும் சண்டை மூண்டது. கணேஷ் தயாரித்துள்ள படத்தில் நடித்த ரம்யா, அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வராமல் ஏமாற்றிவிட்டார் என கன்னட பிலிம்சேம்பரில் புகார் கூறியிருந்தார்.
ஆனால் ரம்யாவோ கணேஷ் தனக்கு ரூ.10 லட்சம் கடன் தரவேண்டும் என்றும், இதைத் தராததாலயே அவர் தன் மீது புகார் கூறுவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் ரம்யா கூறுவது பொய் புகார் என்று கூறி அவர் கன்னட படங்களில் நடிக்க ஒரு வருடத்துக்கு தடை விதித்து கன்னட சினிமா தயாரிப்பாளர் சங்கம் தீர்மானித்தது. இதனால் மனமுடைந்த நடிகை ரம்யா சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
இதற்கிடையே, மூத்த நடிகர் அம்பரீஷ் இந்த விஷயத்தில் தலையிட்டு சமரசம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து நடிகை ரம்யா மீதான தடையை தயாரிப்பாளர் சங்கம் ரத்து செய்வதாக நேற்று அறிவித்தது.


Click it and Unblock the Notifications











