கார்த்தியின் 'மக்கள் நல மன்றம்'

நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி, சூர்யாவின் தம்பி. இவர் பருத்தி வீரன் மூலம் ஹீரோவானவர். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந் நிலையில், நேற்று தனது பிறந்த நாளை கார்த்தி ரசிகர்களுடன் கொண்டாடினார். பிறந்த நாள் விழா தி.நகர் பிட்டி. தியாகராயர் அரங்கில் நடந்தது.
இதில் சென்னையைச் சேர்ந்த ரசிகர் மன்றங்கள் சார்பாக ஊனமுற்றோருக்கு சைக்கிள்கள், தையல் இயந்திரங்கள், மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள், பேனா உள்ளிட்டவற்றை கார்த்தி வழங்கினார்.
இதையடுத்து மக்கள் நல மன்றம் என்கிற சமூக சேவை அமைப்பு தொடங்கப்படுவதாகவும் அறிவித்தார்.
நிகழ்ச்சியில் கார்த்தி பேசுகையில், எங்களை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதன் விளைவுதான் இந்த மக்கள் நல மன்றம். ஏற்கனவே சிவகுமார் அறக்கட்டளை மூலமாக என்னுடைய தந்தையும், அகரம் பவுண்டேஷன் சார்பில் சூர்யாவும் மாணவர்களின் கல்விக்காக பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள்.
என் பங்குக்கு நானும் ஏதாவது செய்ய விரும்பினேன். அதற்கான முதல் படிதான் இந்த விழா.
ரசிகர் மன்றம் என்றால் உருப்படாதவர்கள் என்ற பெயரை மாற்றி, சமூக அக்கறையுடையவர்களாகவும், மக்களுக்கு சேவை செய்பவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் மக்கள் நல மன்றம் என்று பெயரிட்டிருக்கிறோம்.
இந்த அமைப்பின் மூலம் நிறைய நல்ல விஷயங்களை செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் கார்த்தி.
மன்றத்தின் அகில இந்திய கெளரவத் தலைவராக ஞானவேல், தலைவராக பரமு, செயலாளராக வீரமணி ஆகியோர் செயல்படவுள்ளனர்.
இந்த விழாவுக்கு முன்னதாக, திருவான்மியூரில் கார்த்தி ரத்ததானம் செய்தார். மேலும், அடையார் ஒய்.ஆர்.ஜி.கேர் மருத்துவ மையத்திற்கு சென்று எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம் காசோலையையைம் வழங்கினார்.


Click it and Unblock the Notifications











