'ஏக்' நம்பிக்கையில் ஷ்ரியா!

தமிழிலும், தெலுங்கிலும் இதுவரை கிட்டத்தட்ட 35 படங்களை முடித்து விட்ட ஷ்ரியா, இந்தி ஆசை வந்து அங்கு போனார். ஆனால் போன நேரமோ என்னவோ அவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியைத் தழுவின.
வந்த புதிதில் இவர் இந்தி நாயகிகளை ஓரம் கட்டி விடுவாரோ என்ற அச்சம் அங்கு கிளம்பியது. ஆனால் அத்தனை நாயகிகளின் வயிற்றிலும் இப்போது பாதாம்கீர் ஊற்றியது போலாகி விட்டதாம் ஷ்ரியாவின் தொடர் தோல்விகள்.
அதிலும் அவர் கடைசியாக நடித்து வெளிவந்த மிஷன் இஸ்தான்புல் பெரும் தோல்விப் படமாகியுள்ளது.
இப்போது ஷ்ரியா கைவசம் உள்ள ஒரே நம்பிக்கை ஏக்- தி பவர் ஆப் ஒன் என்ற படம்தானாம். இதுவும் கைவிட்டு விட்டால் ஷ்ரியாவை இந்தியில் தேட வேண்டியிருக்கும் என்கிறார்கள் - காரணம், 'அடுத்தாத்தில்' ஆசின் அட்டகாசம் செய்து கொண்டிருப்பதால்.
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வெளியான அத்தடு படத்தின் ரீமேக்தான் இந்த ஏக். நானா படேகர், பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவனின் தம்பி சங்கீத் சிவன்தான் இயக்கி வருகிறார்.
இந்தியில்தான் இப்படி திகட்டலாக இருக்கிறது ஷ்ரியாவுக்கு. ஆனால் தமிழில் படு தைரியமாகத்தான் இருக்கிறார். கந்தசாமி, ஜக்குபாய், குட்டி, தோரணை, சிக்குபுக்கு என ஏகப்பட்ட படங்கள் கைவசம் உள்ளதாம்.
அப்புறம் எதுக்கு அங்க போகனும், இங்கேயே விளையாட வேண்டியதுதானே..!


Click it and Unblock the Notifications











