ப்ளாங்க் செக்குடன் வந்த பதிப்பாளர்.... சுயசரிதை எழுத மறுத்த ஐஸ்வர்யா ராய்!!
மும்பை: ஐஸ்வர்யா ராய் தனது காதல் சர்ச்சைகள் மற்றும் திருமணம் குறித்து சுயசரிதை எழுதினால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக வெளிநாட்டு பதிப்பகம் ஒன்று ஆசை காட்டியுள்ளது. ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் சொந்த வாழ்க்கையை எழுதி விற்க சம்மதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா ராய்.
முன்னாள் உலக அழகியும், இந்தியாவின் நம்பர் ஒன் நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கை பரபரப்பும் திருப்பங்களும் நிறைந்தது. மாடலிங்கில் கொடிகட்டிப் பறந்தது, உலக அழகிப் பட்டம் வென்றது, சினிமாவுக்கு வந்தது என மூன்று கட்டங்களைக் கொண்ட அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள்.
ஐஸ்வர்யா ராய்க்கும் சல்மான்கானுக்கும் காதல் ஏற்பட்டு தகராறில் முடிந் தது. இருவரும் பிரிந்தனர். பின்னர் விவேக் ஓபராயுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் அதுவும் முறிந்தது. அதன் பிறகுதான் அபிஷேக் பச்சனைக் காதலித்து மணந்தார்.
ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் நடந்த இந்த காதல் - திருமண நிகழ்வுகளை மட்டும் புத்தகமாக்கி வெளியிட்டால் பரபரப்பான விற்பனையாகும் என்பதை உணர்ந்து வெளிநாட்டு பதிப்பகம் ஒன்று அவரை அணுகியது. ப்ளாங்க் செக்குடன் அந்த பதிப்பாளர் ஐஸ்வர்யா ராயை அணுகி, சுயசரிதையை எழுதி தருமாறு கேட்டாராம்.
ஆனால் சொந்த வாழ்க்கையை புத்தகம் எழுதி பகிரங்கப்படுத்த ஐஸ்வர்யா ராய் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எத்தனை கோடி கொடுத்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையை புத்தகமாக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா ராய்.
தமிழில் நடிகையாக அறிமுகமான ஐஸ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த ஆண்டு அவர் 5 பெரிய படங்களில் நடித்தார். ஆனால் ரஜினியுடன் நடித்த எந்திரன் மட்டுமே சிறப்பாக ஓடி, அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.


Click it and Unblock the Notifications











