'ஆள் கிடைக்கல...'- பத்மப்ரியாவின் ஏக்கம்

'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தை இயக்கிய சிம்புதேவன் இப்போது, 'இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்' என்ற 'கௌபாய்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். பத்மப்ரியா, லட்சுமிராய், சந்தியா ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று நடந்தது. இயக்குநர் கே பாலச்சந்தர் ஆடியோவை வெளியிட்டார்.
விழாவுக்கு படுகவர்ச்சியாக நமீதாவை மிஞ்சும் அளவுக்கு ஆடையணிந்து வந்திருந்தார் பத்மப்ரியா. அவரது திரையுலக வரலாறு காணாத வகையில் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி பொங்கியது.
விழாவின் முடிவில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், "தரமான கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நான் நடித்து வருகிறேன். அதற்காக நான் தேசிய விருதுக்கு குறி வைத்துள்ளதாகக் கூறுவதில் உண்மையில்லை.
விருது கிடைத்தால் எல்லோரையும் போல சந்தோஷப்படுவேன். சினிமா நடிப்பது விருதுக்காக மட்டுமல்ல.
இந்த விழாவுக்கு நான் கவர்ச்சியாக உடுத்தி வந்ததை எல்லோரும் வேடிக்கையாக பார்க்கிறார்கள். 'இமேஜ்' பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன்.
நயன்தாரா, திரிஷா மாதிரி ஏன் நீங்க கவர்ச்சியாக நடித்து, நிறைய சம்பாதிக்கக்கூடாது? என்று சிலர் எனக்கு 'அட்வைஸ்' செய்கிறார்கள். அவர்கள் பாணி வேறு. என் பாணி வேறு. நிறைய சம்பாதிக்க வேண்டும் எனக்கு ஆசையில்லை..."
திருமணம் எப்போது?
"என் திருமணம் பற்றி இப்போது எதையும் சொல்ல முடியாது. எனக்கும் வாழ்க்கையில் காதல் வந்திருக்கிறது. ஆனால் அது கல்யாணம் வரை போகவில்லை. ஆனால் திருமணம் செய்துகொள்ளும் ஆசை உள்ளது, எல்லா பெண்களைப் போலவும். நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் உடனே திருமணம்தான். ஆனால் ஆள் கிடைக்கவில்லையே..." என்றார்.


Click it and Unblock the Notifications











