படப்பிடிப்புக்கு டிமிக்கி... ஷெரீனால் நஷ்டம்! - தயாரிப்பாளர் கோபம்
கிடைப்பதே ஒன்றிரண்டு வாய்ப்புகள்தான். ஆனால் அவற்றைக் கூட புறக்கணிக்கும் அளவுக்கு அப்படி எதில்தான் பிஸியாக இருக்கிறார்களோ நடிகைகள் என கேட்கும் அளவுக்குதான் சிலரது செயல்கள் அமைந்துவிடுகின்றன.
அப்படி சமீபத்தில் கேட்க வைத்திருப்பவர் நடிகை ஷெரீன்.
துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, பெரிய ரேஞ்சுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டவர் ஷெரீன். ஆனால் காதல், பெற்றோருடன் சண்டை, காதலனுடன் தகராறு என இருக்கும் நேரத்தையெல்லாம் தனிப்பட்ட பிரச்சினைகளுக்காகவே செலவழித்ததால் தனது சினிமா கேரியரை கோட்டை விட்டார்.
இப்போது அவர் பூவா தலையா என்ற ஒரு தமிழ் படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.நாளை மறுநாள் ரிலீசாகிறது இந்தப் படம். வெட்டு குத்து புகழ் சஞ்சய்ராம் தயாரித்து இயக்கியுள்ளார்.
இப்படத்தில் தனக்கு ரூ.5 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் அதை வசூலித்து தரும்படியும் ஷெரீன் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
"பூவா தலையா படத்தில் நடிக்க சஞ்சய்ராமிடம் ரூ.15 லட்சம் சம்பளம் கேட்டேன். ரூ.9 லட்சத்துக்கு ஒப்பந்தம் போட்டனர். முதல் தவணையாக ரூ.4 லட்சம் கொடுத்தனர். மீதி பணம் தரவில்லை" என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
ஷெரீன் அம்மா யசோதரா, "ஷெரீன் 25 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். இன்னும் 5 நாட்கள் நடிக்க வேண்டி உள்ளது. ஆனால் படப்பிடிப்புக்கு அழைக்கவில்லை. மீதி பணம் தராமல் படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்" என்றார்.
இதுபற்றி இயக்குனர் சஞ்சய்ராம் கூறுகையில், "பூவா தலையா படத்தில் நடிக்க ஷெரீன் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பிறகு உடுமலைப்பேட்டையில் படப்பிடிப்பு நடத்த சென்றோம். அங்கு ஷெரீனுக்காக காத்திருந்தோம் அவர் வரவில்லை. எங்களுக்கு கொடுத்த தேதிகளில் கன்னட படமொன்றுக்கு மாற்றி கொடுத்து விட்டு அதில் நடிப்பதற்காக போய் விட்டார். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
ஷெரீன் அம்மாவால் நாங்கள் மிகுந்த சிரமப்பட்டோம். நிறைய தொந்தரவுகள் கொடுத்தார். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு படத்தை முடித்தோம். இதில் சம்பள பாக்கி கேட்க வந்துவிட்டார்," என்றார்.


Click it and Unblock the Notifications











