தடையா?-கவலை இல்லை: மீரா

மீரா ஜாஸ்மினின் தொடர் கால்ஷீட் சொதப்பல், இயக்குநர்கள், நடிகர்களோடு மோதல் ஆகியவற்றோடு அதிருப்தியில் இருந்து வருகிறது மலையாள நடிகர் சங்கமான அம்மா. இதற்கு முத்தாய்ப்பாக, மம்முட்டி முதல் சீனிவாசன் வரை மலையாளத் திரையுலகமே திரண்டு தயாரிக்கும் டுவென்டி 20 படத்தில் நடிக்க மீரா ஜாஸ்மின் மறுத்து விட்டார்.
மலையாளத் திரையுலகின் முன்னணிக் கலைஞர்களான 67 பேர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஏழைக் கலைஞர்களின் நலனுக்கு நிதி திரட்டும் வகையில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.
இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கோரி நடிகர் திலீப், மீராவை அணுகினார். ஆனால் 3 தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனவே டுவென்டி 20 படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விட்டார் மீரா.
இதனால் கோபமடைந்த மலையாளத் திரையுலகினர், மீரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். இதையடுத்து ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு மீராவுக்கு அம்மா, நோட்டீஸ் அனுப்பியது. சில நாட்களுக்கு முன்பு, மலையாளப் படங்களில் மீரா ஜாஸ்மினுக்கு எவ்வித ஒத்துழைப்பும் தருவதில்லை என்றும் அறிவித்தது.
தற்போது இயக்குநர் கமலின் மின்னாமின்னிக் கூட்டம் உள்ளிட்ட 3 மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் மீரா. இந்தப் புதிய உத்தரவால் 3 படங்களிலும் அவர் தொடர்ந்து நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து சேச்சியிடம் கேட்டபோது, நோட்டீஸ் குறித்தோ, தடை குறித்தோ நான் கவலைப்படவில்லை. தமிழிலும், தெலுங்கிலும் நான் பிசியாக உள்ளேன். அதனால்தான் டுவென்டி 20 படத்தை நான் நிராகரித்தேன்.
அதற்காக இப்போது எனக்கு தடை விதித்துள்ளனர். இது கேலிக்கூத்தாக உள்ளது. இதெல்லாம் ரொம்ப ஓவர். இதுதொடர்பாக சிலர் விடுத்துள்ள அறிக்கைகள், எந்த அளவுக்கு என் மீது காட்டமாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவர்களையெல்லாம் எப்படி சமாளிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றார் மீரா.
இந்த நிலையில், நரேனுடன் புதிய மலையாளப் படம் ஒன்றில் வெள்ளிக்கிழமை ஒப்பந்தமாகியுள்ளாராம் மீரா. இதே நரேனும் அம்மா படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 'அய்யா' தடையிலிருந்து எப்படியோ தப்பி விட்டார். 'அம்மா' மட்டும் மாட்டிக் கொண்டு விட்டார்!


Click it and Unblock the Notifications











