முகமூடியில் வில்லனானார் நரேன்!!
ஜீவாவை ஹீரோவாக வைத்து மிஷ்கின் இயக்கும் முகமூடி படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுக்கிறார் நரேன்.
மிஷ்கின் இயக்கிய முதல் படமான சித்திரம் பேசுதடி மூலம் அறிமுகமானவர் நரேன். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்த அஞ்சாதே மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு கிட்டத்தட்ட காணாமலே போய்விட்டார்.
இப்போது தான் அறிமுகப்படுத்திய நாயகனான நரேனுக்கு, மீண்டும் புதிய பரிமாணத்தைத் தருகிறார் மிஷ்கின்.
அடுத்து ஜீவா நாயகனாக நடிக்கும் முகமூடி படத்தை இயக்குகிறார் மிஷ்கின். இந்தப் படத்தில் வரும் பவர்புல் வில்லன் பாத்திரத்துக்கு அவர் நரேனைத் தேர்வு செய்துள்ளார்.
கிட்டத்தட்ட ஹீரோவுக்கு சமமான வேடம் என்பதாலும், இதுவரை வாங்காத பெரிய சம்பளம் என்பதாலும் உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளார் நரேன்.
இதுகுறித்து நரேன் கூறுகையில், "இதை வில்லன் வேடமாக நான் பார்க்கவில்லை. எதிர்மறையான இன்னொரு ஹீரோவாகத்தான் பார்க்கிறேன். எனது நடிப்பு வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை இந்தப் படம் தரும்," என்றார்.


Click it and Unblock the Notifications











