'அய்யோ... அசின்!'- அலறும் தயாரிப்பாளர்கள்!!

முன்பு நடிகைகள் ஹேமமாலினி, ஸ்ரீதேவி போன்றவர்கள் தமிழிலிருந்து வடக்குப் பக்கம் சென்று முழுமையாக செட்டிலாகிவிட்டார்கள். உச்சத்திலிருந்த காலத்தில் கமல்ஹாசனைக் கூட நிராகரித்த இவர்கள், ரிட்டயர்மெண்டுக்குப் பிறகுதான் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமுள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால் அவர்களைப் பார்க்க தமிழ் ரசிகர்களுக்குத்தான் விருப்பமில்லாமல் போய்விட்டது!
இவர்கள் லிஸ்டில் இப்போது அசினும் சேர்ந்துவிட்டார் போலிருக்கிறது.
இந்தி கஜினி வெற்றிக்கு பின் ஆளே மாறிவிட்ட அசின், இப்போது தமிழ்ப் படங்களில் நடிக்கவே ஒப்புக் கொள்வதில்லையாம். வீட்டையும் நிரந்தரமாக மும்பைக்கு மாற்றிவிட்டார்.
சம்பள தொகையோ கேட்பவர்களை மயக்கம் போட்டு விழவைக்கும் அளவுக்கு எகிறிவிட்டதாம். சமீபத்தில் அசினிடம் தேதி கேட்டுப் போன 3 தயாரிப்பாளர்கள் நெருப்பில் கால் வைத்ததுபோல துள்ளத் துடிக்க ஓடி வந்துவிட்டார்களாம்.
காரணம் வெள்ளையாக மட்டுமே ரூ.2 கோடிவரை சம்பளம் தர வேண்டும் என்ற அவரது கண்டிஷன்தானாம்.
விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் படத்தில் அவரைத்தான் கதாநாயகியாக்க ஏற்பாடுகள் நடந்தன. அந்த படத்துக்கு ரூ.2 கோடிக்கும் மேல் சம்பளம் கேட்டு நிபந்தனை விதித்ததால் வேண்டாம் என விட்டுவிட்டார்களாம்.
இந்திப் படங்களில்தான் தொடர்ந்து நடிக்க போவதாகவும் தமிழ், மலையாளப்படங்களில் நடிப்பதில்லை என்றும் நெருக்கமானவர்களிடம் அவர் கூறிவருவதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பளத்தை எக்கச்சக்கமாக உயர்த்தியது கூட தமிழ் படங்களைத் தவிர்க்கத்தான் என்றும் அவர் கூறியுள்ளாராம்.
முன்பு சர்ச்சைகளில் சிக்காத நல்ல நடிகை எனப் பெயரெடுத்த அசினைப் பற்றி இண்டஸ்ட்ரியில் இப்படிப் பேச்சு என்றால், தனிப்பட்ட முறையிலும் அவரைச் சுற்றி மர்மமான புகார்கள்.
தொடர்ந்து இரண்டு வேலைக்காரர்களால் அவர் மீது சந்தேக நிழல் படிய ஆரம்பித்துவிட்டது.
ஏற்கனவே பியூலா என்ற வேலைக்காரப் பெண்ணை கடத்தியதாக அவரது தாய் போலீசில் புகார் செய்தார். அந்தப் பஞ்சாயத்து முடியவே நீண்ட நாட்களானது. இப்போதோ முத்துக்குமார் என்ற உதவியாளரை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக இன்னொரு புகார் கிளம்பியுள்ளது. இந்த முத்துக்குமார் விவகாரம் இன்னும் கூட மர்மமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
தன்னைச் சுற்றிய பரபரப்புகளால் டென்ஷனில் உள்ள அசின் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது:
விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் நடிக்க நான் ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல. எனக்கு சம்பளம் ஒரு பொருட்டே இல்லை. சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பதே என் லட்சியம். இந்தியில் நான் பிசியாக இருந்தபோது வேட்டைக்காரன் படத்தில் நடிக்க அழைத்தனர். கால்ஷீட் இல்லாததால் நடிக்க முடியவில்லை, தமிழ் படங்களில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று யாரிடமும் சொல்லவில்லை. நல்ல கதைகள் அமைந்து கால்ஷீட்டும் இருந்தால் நிச்சயம் நடிப்பேன்.
வேலைக்காரர்களிடம் நான் கடுமையாக நடந்து கொள்வதாகவும் வதந்திகள் பரப்புகின்றனர். என்னிடம் இரக்க குணம் அதிகம். யாராவது உதவி கேட்டு வந்தால் அவர்களை நம்பி விடுவேன். தேவையான உதவிகளை செய்து கொடுப்பேன் அதனால் வந்த வினையை இப்போது அனுபவிக்கிறேன்.
நல்ல முத்துகுமாரும் அவரது தாயாரும் என்னிடம் பணம் பறிப்பதற்காக சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள். வேலைக்காரப் பெண் பியூலா விஷயமும் இதே பாணியில்தான் நடந்தது. இனிமேல் வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன், என்றார்.
என்னமோ போங்க... நடப்பது ஒண்ணும் நல்லா இல்லை!


Click it and Unblock the Notifications











