சமந்தாவுக்கு கோயில்.. அடேங்கப்பா வெறித்தனமான ரசிகரா இருக்காரே.. பிறந்தநாளுக்கு நடந்த விஷயம்
அமராவதி: சமந்தா நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.அந்த சீரிஸில் ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் அவர் பட்டையை கிளப்பியிருந்தார். அடுத்ததாக புதிய சீரிஸ் ஒன்றில் கமிட்டாகியிருக்கும் அவர் திரைப்பட தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார். அதன்படி அவர் தயாரித்த சுபம் திரைப்படம் சமீபத்தில்தான் வெளியானது. இந்தச் சூழலில் அவர் 38ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரையுலகில் ஃபேமஸானவர் சமந்தா. தமிழில் அவர் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். பிறகு தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். இந்த இரண்டு மொழிகளிலுமே அவர் தனது திறமையை நிரூபித்ததன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. முக்கியமாக தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து மற்ற மொழி திரையுலகிலும் கோலோச்சியதை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் சந்தோஷம்தான் பட்டார்கள்.
சைதன்யாவுடன் திருமணம்: தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார் சமந்தா. இரண்டு பேரின் காதலுக்கும் நாகார்ஜுனா சம்மதம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு டோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம்வந்தார்கள் அவர்கள். ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்தும், காதலை வெளிப்படுத்தியும் சுமூகமாக தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார்கள்.

பிரிந்த சாம் - சைதன்யா: மேலும் சமந்தாவும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் யார் கண் பட்டதோ தெரியவில்லை அவர்கள் பிரிவதாக அறிவித்து சட்டப்பூர்வமாக விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். அவர்களது பிரிவுக்கு சமந்தா தொடர்ந்து நடித்தது, அவருக்கு வந்த மையோசிடிஸ் நோய் என பல காரணங்கள் யூகங்களாக சொல்லப்பட்டன. இருப்பினும் அவர்கள் இரண்டு பேரும் இதுகுறித்து எந்த விதமான விளக்கமும் அளிக்காமல்; அமைதியாக பிரிந்து; தங்களது கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சமந்தாவும் மையோசிடிஸ் நோயிலிருந்து சிகிச்சை மூலம் மீண்டுவிட்டார்.
இரண்டாவது இன்னிங்ஸ்: அந்த சிகிச்சைக்காக திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்தார். அது ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் சமந்தாவின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள். ஆக்ஷன், முத்தக் காட்சி என அத்தனையிலும் கலக்கியிருந்தார் சாம். தற்போது இன்னொரு வெப் சீரிஸில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் கட்டிய ரசிகர்: மேலும் அவர் சில தமிழ் படங்களில் நடிக்கவும்பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சொல்கிறார்கள். இந்நிலையில் அவர் நேற்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார். ரசிகர்களும் தங்கள் பங்குக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால் ஆந்திராவை சேர்ந்த ரசிகர் ஒருவர் சமந்தாவுக்காக கோயில் கட்டியிருக்கிறார். ஆந்திர மாவட்டம் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த சந்தீப் என்பவர்தான் இதனை செய்திருக்கிறார்.
சந்தீப் பேட்டி: இதுகுறித்து சந்தீப் பேசுகையில், "சமந்தாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரது சேவை குணத்துக்காகத்தான் அவரது ரசிகராக மாறினேன். அவரது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அனாதை இல்லங்களுக்கு உணவு வழங்கிவருகிறேன்" என்றார். சமந்தாவுக்கு கோயில் கட்டிய விவகாரம் தற்போது ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











