எனக்கு 17 வயசுதான் ஆகுது.. அதுக்குள்ள அந்த மாதிரி கேள்வி கேட்குறீங்க.. காண்டான அனிகா
சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தமிழில் அவர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமடைந்தார். அதனையடுத்து விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்தார். இப்போது ஹீரோயினாகவும் நடித்துவரும் அவர்; தனுஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கேரளாவில் கடந்த 2004ஆம் ஆண்டு பிறந்தவர் அனிகா சுரேந்திரன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் 2007ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு அங்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. தனது திறமையால் தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

என்னை அறிந்தால்: அந்த வகையில் தமிழில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அறிமுகமானவர் அனிகா. அதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது. குறிப்பாக க்ளைமேக்ஸில் அவருக்கும், அஜித்துக்குமான காட்சி பலரையும் கலங்க வைத்தது.
ஹீரோயின்: தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா புட்டபொம்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனையடுத்து மலையாளத்திலும் ஹீரோயினாக களமிறங்கிய அவர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்தார். படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே அனிகா ஓவர் கவர்ச்சி காட்டியிருக்கிறார் என கூறப்பட்டது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகளா இது என வாயை பிளந்தனர்.
கவர்ச்சி காட்டினாலும் படத்தின் கதையில் பல சிக்கல்கள் இருந்ததன் காரணமாக ஓ மை டார்லிங் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதனையடுத்து அவர் தற்போது மலையாளத்தில் மாலு என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். மலையாளத்தில் முதல் படம் சொதப்பியதால் நிச்சயம் இந்தப் படத்தின் மூலம் தனக்கான இடத்தை நிலைப்படுத்திட வேண்டுமென்ற கணக்கில் இருக்கிறார் அவர்.
தனுஷ் இயக்கத்தில்: தமிழிலும் ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்திருக்கும் அவர் தனுஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்தான் வெளியானது. கண்டிப்பாக இந்தப் படம் தனக்கு பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் அனிகா. இதற்கிடையே சமூக வலைதள பக்கங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
ட்ரெண்டாகும் அனிகா பேட்டி: இந்நிலையில் அனிகா அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் தொகுப்பாளர் அவரிடம், 'நீங்கள் பீர் அருந்துவீர்களா இல்லை ஒயின் அருந்துவீர்களா' என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அனிகா, "எனக்கு இப்போது 17 வயதுதான் ஆகிறது. அதற்கு இந்த மாதிரி கேள்வி கேட்குறீங்க. இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீங்க" என்று காட்டமாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











