Don't Miss!
- News அந்த ஜூஸ், மோர் தான் காரணமா? மயக்கம், நெஞ்சு வலி.. விஷ முறிவு மருந்து எடுத்துக்கொண்ட மன்சூர் அலிகான்
- Finance மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு.. அதுவும் எலான் மஸ்க் இந்தியா வரும் நேரத்தில்.. வாவ்..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஆடை.. அமலாபாலுக்கு நிறைய சபாஷ் சொல்லலாம் தான்.. ஆனா, இந்த முரண்பாடுகள் கொஞ்சம் இடிக்குதே!
அமலாபாலின் ஆடை படத்தில் பல முரண்பாடுகள் உள்ளன.
சென்னை: அமலா பால் நடித்துள்ள ஆடை படத்தில் இடம் பெற்றுள்ள பல முரண்பாடுகள் படத்தின் மீதான எதிர்மறையான விமர்சனத்திற்கு காரணமாகி இருக்கிறது.
மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்னகுமாரின் இரண்டாவது படம் தான் ஆடை. அமலா பால் நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருந்தே சர்ச்சைகள் பின்தொடர்ந்து வருகின்றன. படம் ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில் கூட அது ஓயவில்லை.
படத்தை பலர் பாராட்டி வருகின்றனர். தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம், விரசமில்லாமல் எடுக்கப்பட்டுள்ள ஒரு நல்ல படைப்பு என்பதே ஆடை படத்துக்கு கிடைத்துள்ள விமர்சனம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அர்ப்பணிப்பான நடிப்பு:
அமலாபாலும் தன் முந்தைய படங்களில் இருந்து நூறு சதவீதமல்ல, 200 சதவீத அர்ப்பணிப்பை இப்படத்திற்காக வழங்கி இருக்கிறார். இடைவேளைக்குப் பிறகான பாதி காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்து பதைபதைக்க வைக்கிறார். ஆனால், அமலாபாலின் இத்தனை அற்புதமான நடிப்பை, படத்தில் உள்ள சில முரண்பாடுகள் ரசிக்க விடாமல், விமர்சிக்க செய்து விட்டன.
நங்கேலி வரலாறு:
படத்தின் துவக்கத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியின் போது நடைமுறையில் இருந்த மார்பக வரி சட்டம் தொடர்பாக ஒரு அனிமேஷன் படம் காட்டப்படுகிறது. ஆட்சியர் குடும்பத்து பெண்களை தவிர மற்ற பெண்கள் அனைவரும் தங்களுடைய மார்பகங்களை மறைக்க துணி உடுத்த வேண்டும் என்றால், அந்த துணியின் அளவிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் என்பதே அந்த கொடூரமான சட்டம். அந்த சட்டத்துக்கு எதிராக தனது மார்பகங்களை அறுத்து வாழையில் வைத்த நங்கேலியின் வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது.
பெரிய முரண்பாடு:
ஆனால் படத்தின் இறுதிக் காட்சிகளில், அமலாபாலின் நிர்வாணத்திற்கு காரணம் நங்கேலி கதாபாத்திரம் தான் எனக் காட்டப்படுகிறது. மற்ற பெண்களின் மானத்திற்காவும், அவர்கள் சுதந்திரமாக ஆடை அணிய வேண்டும் என போராடிய ஒரு பெண், எப்படி அடுத்தப் பெண்ணின் ஆடையை உருவி நிர்வாணமாக்குவாள்? இந்தக் கேள்வி படத்தின் மீதான நம்பகத்தன்மையை குலைத்து விடுகிறது.
காமினியின் பெண்ணியம்:
இதேபோல், அமலாபாலின் கதாபாத்திரமான காமினி ஒரு தலைக்கனம் பிடித்த பெண்ணாக காட்டப்படுகிறார். பெண்ணியம் பேசிக் கொண்டு இஷ்டப்படி ஆடை அணிவது, பைக்கில் ரேஸ் போவது, ஆண் தோழரை பின்னால் அமர வைத்து பைக் ஓட்டி அலற வைப்பது, சரக்கடிப்பது, சிகரெட் புகைப்பது, ஆணுக்கு நிகராக நடந்து கொள்வது, தொழிலுக்காக ஈவு இரக்கம் இன்றி நடந்து கொள்வது என முரட்டுப் பெண்ணாக காட்டப்படுகிறார். இது தான் பெமினிசம் என அவர் நம்புகிறார்.
தவறான உதாரணம்:
ஆனால், வழக்கம் போல அவரையும் உடல் என்ற ஆயுதத்தால் தான் அடக்க முடியும் என தவறான உதாரணத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். இது ஆபத்தானது. ஏற்கனவே, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் சூழலில் எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும், அவரை உடல் ரீதியாக பலமிழக்கச் செய்ய முடியும் என்ற எண்ணத்தை இது போன்ற படங்கள் ஊக்குவிப்பதாக அமைந்து விடக்கூடாது. அதேபோல், தைரியசாலியான பெண்களுக்கு, இது போல் நமக்கும் நடந்தால் இப்படித்தான் முடங்கிப் போய்விட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கக் கூடாது.
சமூகம் தரும் ஆடை:
கடைசி காட்சியில் இது அல்ல பெமினிசம், எல்லா சுதந்திரத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதாய் உணர்கிறார் நாயகி. அப்படியானால் இதன் மூலம் இயக்குனர் சொல்ல வருவது என்ன? பெண்கள் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்கிறாரா? இஷ்டப்படி ஆடை அணியும் பெண்கள் கெட்டவர்கள். ஒழுங்காக ஆடை அணிந்து, சமூகம் பெண்களுக்கு கொடுத்துள்ள ஆடை 'சுதந்திரத்தை' அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்கிறாரா?
வாய் சவடால் தானா?
தைரியமான பெண்ணாக சித்தரிக்கப்படும் காமினி, தான் நிர்வாணமாக்கப்பட்டவுடன் மானத்துக்கு அஞ்சுகிறாள். யார் கண்ணிலும் படாமல் ஓடி ஒளிகிறாள். அப்படியானால், ஒரு பெண்ணின் மன தைரியம் என்பது ஆடையில் தான் இருக்கிறதா? இயக்குனரே. 'இன்று இரவு முழுவதும் டிரஸ்சே இல்லாமல் இந்த கட்டடத்தில் இருந்து காட்டட்டுமா? ஒவ்வொரு ஆடையாக அவிழ்த்துக்கொண்டே நேக்கடாக நியூஸ் வாசிக்கட்டுமா? பெட் கட்றியா?' என முதலில் பேசுகிறாள். ஆடை இல்லாத நிலையில் அவரால் வெளியேக்கூட வரமுடியவில்லை. அப்படியானால், காமினி பேசியது எல்லாம் வெறும் வாய் சவடால் தானா?
நல்ல பெண் அடையாளம்:
ஏற்கனவே வெளிவந்த பல தமிழ் சினிமாக்களில், திமிர்ப்பிடித்த நாயகி நிர்வாணமாக்கப்படும் போதோ, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படும் போதோ தான் மனம் திருந்தி, இந்த சமூகம் வகுத்துள்ள நல்ல பெண் அடையாளத்துக்கு திரும்புவார். அதுபோல் தான் இருக்கிறது ஆடை படத்தின் முடிவும்.
ஏமாற்றம்:
அதேபோல், ஆடை என்பது இந்த சமூகத்தில் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது, ஆடம்பரத்தின் அடையாளமாய் எப்படி மாறிபோய்விட்டது என்பது பற்றிய படமாக தான் இது இருக்கும் என நினைத்தோம். ஆனால் படம் அதில் இருந்து விலகி, பிராங்க் ஷோவால் நடக்கும் அபாயங்கள், செல்பி மோகம் என நவீன கோமாளியின் பக்கம் திரும்பி விடுகிறது. நிச்சயம் இவையும் கண்டிக்கப்பட வேண்டிய விசயங்கள் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இப்படத்தில் இது ஏமாற்றத்தைத் தருகிறது.
சரித்திரம் தான்:
இப்படி படம் முழுக்க நிறைய முரண்பாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் படத்தின் மேக்கிங் மற்றும் அமலாவின் நடிப்பு அதனை மறக்கடித்துவிடுகிறது. அப்புறம் முக்கியமான விஷயம், சரித்திரனின் நரித்தனத்துக்கு எதிராக மெசேஜ் சொல்லும் இந்த படத்தில், சரித்திரனே நடித்திருப்பது பெரிய சரித்திரம் தான்.