பிரபல நடிகையின் இன்ஸ்டா கணக்கு முடக்கம் … யாரு பார்த்த வேலைடா இது?
சென்னை : பிரபல நடிகை காயத்ரி ஷங்கரின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட எந்த செய்திகளுக்கும் பதிலளிக்க வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
சினிமா பிரபலங்கள், சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் சமூகவலைதளப் பக்கங்களை மர்ம நபர்கள் ஹேக் செய்வது, போலி கணக்கு தொடங்குவது தொடர்கதையாகவே உள்ளது.

காயத்ரி ஷங்கர்
விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலமாக மிக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் காயத்ரி ஷங்கர். இவர், அதற்கு முன் 18 வயசு என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி இருந்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதி அவரை பார்த்து ப்பா.. யாருடா இந்த பொண்ணு எனக் கேட்கும் காட்சி மிகப் பெரிய அளவில் வைரலாகப் பேசப்பட்டது.

பல திரைப்படங்களில்
அந்த படத்திற்கு பிறகு அவர் பொன்மாலை பொழுது, சூப்பர் டீலக்ஸ், ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். காயத்ரி விஜய் சேதுபதியுடன் இணைந்தே பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் road to thumba என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார். அந்தக் குறும்படம் இந்தியன் ஃபிலிம் புராஜெக்ட்டில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றது.

இன்ஸ்டா ஹேக்
இந்நிலையில், காயத்ரி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். சில இணைப்புகள் அவரது கணக்கிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த அழைப்பிலிருந்து வரும் லிங்கை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் நடிகை காயத்ரி ஷங்கர் அதில் பதிவிட்டுள்ளார். அவர் கணக்கை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

சமூகவிரோதிகள்
சமீபத்தில் நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு பின் மீட்கப்பட்டது. அதே போல நடிகர் பார்த்திபன் ட்விட்டர் கணக்கும்,நடிகை அம்ரிதா ஐயர் இன்ஸ்டாகிராம் பக்கமும், சின்னத்திரை நடிகை லீசா இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டன. பிரபலங்கள் பயன்படுத்தும் சோஷியல் பக்கங்களை சமூகவிரோதிகள் சிலர் ஹேக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











