மறந்தால்தானே நினைப்பதற்கு.. மறைந்த நடிகை சௌந்தர்யா குறித்து.. பார்த்திபனின் உருக்கமான கவிதை
சென்னை: இயக்குநர் பார்த்திபன் தமிழ் சினிமாவிலேயே வித்தியாசத்திற்கு பெயர் போனவர். இன்னும் சொல்லப்போனால் இவரைப் போன்று அனைத்து படங்களையும் ஒரு சோதனைப் படங்களாக எடுக்கும் இயக்குநர்கள் மிக மிகக் குறைவு. நடிக்க வேண்டியது, அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு தனது சொந்த தயாரிப்பில் படம் எடுக்க வேண்டியது என பார்த்திபன் எப்போதும் வித்தியாசமானவர். இவர் மறைந்த நடிகை சௌந்தர்யாவின் நினைவு நாளை முன்னிட்டு, சௌந்தர்யா குறித்து கவிதை எழுதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பார்த்திபன் ஒரு விருட்சம். பலரும் சினிமாவில் பணத்திற்காக ஓடிக்கொண்டு இருக்கும் காலத்தில், சினிமாவை தன் மூச்சு போல நினைக்கும் வெகு சில திரைக்கலைஞர்களில் இவரும் ஒருவர். பார்த்திபனின் நக்கல் நிறைந்த நடிப்புக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவுக்கு இவரது இயக்கத்திற்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பார்த்திபனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்குச் சென்றால், ஒரு வித்தியாசமான சினிமாவைப் பார்த்த உணர்வு இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டார். இவரது வித்தியாசமான படங்கள் சில நேரங்களில் ரசிகர்களுக்கு திருப்தியைக் கொடுக்கிறது, சில நேரங்களில் ஒர்க் அவுட் ஆவதில்லை.

கவிதை: இயக்குநர் பார்த்திபன் சமீப காலமாக அதிகப்படியான கவிதைகளை எழுதி வருகிறார். விரைவில் அவரது கவிதைத் தொகுப்புகள் அடங்கிய புத்தகம் வெளியாகவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இவர் எழுதும் கவிதைகள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெறுகிறது. சமீபத்தில் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி குறித்து எழுதுகையில், 'Dhoni
ஐந்தெழுத்து மந்திரம் !
மந்திரப் புன்னகையை நேற்று தான் முதன் முதலில் சந்தித்தேன்.
தேன் : அவரது இனிமையாக பழகும் இன்முகம்.
முகம் ஒப்பனை இன்றி இருந்தது.
இருந்தது சில மணித்துளிகளே என்றாலும் இருந்தவர்களின் இதயங்களை விக்கட்டாக வீழ்த்தினார்.
வீழ்த்தியவரை வாழ்த்தி பேசிவிட்டு "I love Dhoni " என்றேன் முழு கூட்டமும் ஆர்ப்பரித்தது.
பறித்து எறியப்பட்டது என் பாதி மரியாதை அதற்கு முந்தய தினம் அந்த மாளிகையில் இதே வார்த்தைகளை நான் உச்சரித்த போது.
போதுமான மகிழ்ச்சியுடன் கூடு திரும்பினேன்!
திரும்பிய பக்கமெல்லாம் பறவைகள் ஒலி என் அலுவலகத்தின் ஒலிபெருக்கியில்....' என எழுதி இருந்தார். இது பலரது கவனத்தை ஈர்த்தது.

சௌந்தர்யா: இவர் இன்று அதாவது ஏப்ரல் 24ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில், நடிகை சௌந்தர்யாவின் நினைவு நாளை முன்னிட்டு அவர் குறித்து கவிதை எழுதியுள்ளார். சௌந்தர்யாவின் நினைவு நாள் ஏப்ரல் 17ஆம் தேதி என்றாலும், அவர் இன்று அவரது நினைவு குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது, " மறக்கத்தான் நினைக்கிறேன்
மறந்தால் தானே நினைப்பதற்கு?
மறைந்தால் தானே அழுவதற்கு?
இருக்கும் போதே மறைந்துப் போகிற உறவுகளுமுண்டு, போன பின்பும்
மனசோட ஒட்டிகிட்டிருக்க நினைவுகளுமுண்டு!
-இவன்" என பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'இவன்' படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கவும் செய்திருந்தார் பார்த்திபன். நடிகை சௌந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி விமான விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











