விஜயகாந்த் அஞ்சலிக்கு ஏன் வரவில்லை.. அடுக்கடுக்காக வந்து விழுந்த கேள்வி.. ஐஸ்வர்யா ராஜேஷ் எஸ்கேப்!
சென்னை: நடிகர் விஜயகாந்த் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். திரையுலகிலிருந்து விஜய், இளையராஜா, ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோரும் நேரில் சென்று தங்களது இறுதி மரியாதை செலுத்தினர். இந்த சூழலில் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜயகாந்த் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து மருத்துவர்கள் உடல்நிலையை தேற்றினார்கள். இதனையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் தேமுதிக கட்சியின் பொதுக்குழுவில் கலந்துகொண்டார். அது சிலரிடம் விமர்சனத்தை கிளப்பியது. இருந்தாலும் கேப்டனை நேரில் பார்த்துவிட்டோம் என்ற நிம்மதியில் தேமுதிக தொண்டர்கள் இருந்தார்கள்.

உயிரிழப்பு: ஆனால் பொதுக்குழுவில் கலந்துகொண்ட சில நாட்களிலேயே அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் அழற்சி என்று மருத்துவர்கள் கூறினர். இதனால் ரசிகர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
அரசு மரியாதையுடன் அடக்கம்: அவர் உயிரிழந்தது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திரையுலகினர் முதல் சாமானியர்கள்வரை அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து தீவுத்திடலில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு கேப்டன் சமாதிக்கு தொடர்ந்து மக்கள் சாரை சாரையாக சென்றுவருவது குறிப்பிடத்தக்கது.
பெயர் வைக்க வேண்டும்: இதற்கிடையே விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே அவரது பெயரை நடிகர் சங்க கட்டடத்துக்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. அவர் இறந்த பிறகு பலரும் அந்த கோரிக்கையை வைக்க ஆரம்பித்தனர். ஏனெனில் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்து ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்திருக்கிறார். இந்த சூழலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னை தாம்பரத்தில் நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார். அதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
விஜயகாந்த் பற்றிய கேள்வி: அவரிடம் செய்தியாளர்கள் விஜயகாந்த் இறப்பு குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், நகைக்கடை திறப்புக்காக வந்திருக்கிறேன். சம்பந்தம் உள்ளதாக கேளுங்களேன் என்று நழுவினார். ஆனால் செய்தியாளர்களோ தொடர்ந்து விஜயகாந்த் பற்றி கேள்விகளை தொடுத்துக்கொண்டே இருந்தனர். ஏன் அவர் அஞ்சலிக்கு வரவில்லை என்றும் கேட்டனர். அப்போது பேசிய அவர், "நான் புதுச்சேரியிலிருந்து நேற்று இரவுதான் வந்தேன். விஜயகாந்த் உயிரிழந்தது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது என்றார். ஆனால் சுழல் 2 ஓடிடி தொடருக்காக, புதுச்சேரியில் இருந்தேன்" என்றார்.
பெயர் வைக்கலாமா?: அதனைத் தொடர்ந்து நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த்தின் பெயரை வைக்கலாமா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த்தின் பெயர் வைப்பது சரி என்றால் அதில் தவறே இல்லை. எல்லோருக்கும் அது பொதுவான கருத்தாக இருந்தால் அதை செய்யலாம், என்றார். உங்கள் கருத்து என்ன என சொல்லுங்களேன் என்று நிருபர்கள் கேட்டபோது, அதற்கு நேரடியாக ஆமா, இல்லை என்று பதிலளிக்கவில்லை அவர். "எல்லோருடைய கருத்தும்தான் என்னுடைய கருத்து" என்று கூறினார்.
மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பாலா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, 'உதவி செய்வது நல்ல விஷயம்தான். அதை உற்சாகப்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் செய்யவில்லையா என்று கேள்வி கேட்கக்கூடாது. நானும் நிறைய உதவிகள் செய்திருக்கிறேன். ஆனால் அதை வெளியில் சொல்ல வேண்டும் என்று இல்லை. நாம் உதவி செய்வது நமக்கு தெரிந்தால் போதும்" என்றார்.


Click it and Unblock the Notifications











