கேரவனை உடை மாற்ற பயன்படுத்துங்கள்.. வேறு விஷயங்களுக்கு வேண்டாம்.. மனதில் இருந்ததை பட்டென பேசிய அம்பிகா
சென்னை: நடிகை அம்பிகா தமிழ் சினிமாவில் 80களின் இறுதியில் தொடங்கி 90களின் தொடக்கத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். இப்போதும் அவ்வபோது தனது மனதைக் கவரும் கதைக்களில் மட்டும் நடிக்கிறார். இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
நடிகை அம்பிகா கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, " நான் சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டு இருந்த காலத்தில் ஒரு படம் வெளியாகி அதன் தயாரிப்பு செலவில் இருந்து ரூபாய் 2 லட்சம் அதிக வசூல் வந்துவிட்டாலே மிகப்பெரிய வெற்றிப் படம். நாங்களும் ஒரு படம் தயாரித்தோம். அந்த படம் வெளியான போது மொத்தமாக எங்களுக்கு ரூபாய் 5 லட்சம் லாபம் வந்தது. அதன் பின்னர் நாங்கள் படம் தயாரிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டோம். ஒரு சிலர், நீங்கள் படம் தயாரியுங்கள் நடிக்கிறோம் என்று கூறுவார்கள், ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் அவர்களின் நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும்.

இன்றைக்கு நடிகர்களுக்கு 200 கோடிகள், 250 கோடிகள் சம்பளங்கள் உயர்ந்ததற்கு காரணம், தயாரிப்பாளர்கள்தான். அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு அது. ஒரு நடிகர் குறிப்பிட்ட நாட்களுக்கு ரூபாய் 10 லட்சம் சம்பளத்திற்கு ஒரு தயாரிப்பாளரிடம் ஒத்துக் கொள்கிறார் என்றால், வேறு ஒரு தயாரிப்பாளர் அதே நாட்களுக்கு ரூபாய் 15 லட்சம் தருகிறேன் எனக் கூறினால், அந்த இடத்தில் அந்த நடிகரின் சம்பளம் தன்னால் உயருகிறது.
பாவமான தயாரிப்பாளர்கள்: இன்றைக்கு தயாரிப்பாளர்களைப் பார்த்தால் பாவமாக உள்ளது. தயாரிப்பாளர்கள் இருந்தால் தான் ஒரு நடிகர், ஒரு நடிகை, ஒரு இயக்குநர், ஒரு படம். அவர்கள் இல்லை என்றால் சினிமா உலகம் ஆரோக்கியமானதாக இருக்காது. முன்பெல்லாம் கேரவன் கலாச்சாரம் என்பதே இல்லை. படப்பிடிப்புத் தளமே கலகலப்பாக இருக்கும்.
கலகலப்பான படப்பிடிப்பு: உணவு இடைவேளைகளில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். விஜயகாந்த் சார், பிரபு சார் வீட்டில் இருந்து சாப்பாடு வரும், இது நல்லா இருக்கும்.. இது சாப்பிட்டு பாரு.. என்று அவர்கள் கூறுவார்கள். மர நிழலில் அமர்ந்து கொண்டு இருப்போம். படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்கு முன்னர், உதவியாளர்கள் சென்று, அருகில் உள்ள வீடுகளில் உள்ள கழிப்பறையை பயன்படுத்திக்க அனுமதி கேட்டு வருவார்கள்.

எதற்கு கேரவன்: அப்போது எல்லாம் கேரவன் என்பது கிடையாது. கேரவன் என்ற வார்த்தையை கேட்டது கூட இல்லை. இன்றைக்கு கேரவன் இருப்பது நல்லதுதான். நடிகர்கள் ஆடைகள் மாற்ற, கழிவறைகளை பயன்படுத்திக் கொள்ள கேரவன்களைப் பயன்படுத்துவது என்பது சரியானது. இதற்கு மட்டும் கேரவன்களைப் பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார். நடிகை அம்பிகாவின் இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இன்றைக்கு கேரவனில் பல நடிகர்கள் ஓய்வு எடுக்கவும் அரட்டை அடிக்கவும் பயன்படுத்திக் கொண்டு ஷாட்டுக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை என பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











