Ammu Abhirami: கனவு நனவாகியிருக்கு.. ஜமா படம் குறித்து நெகிழ்ச்சியடைந்த அம்மு அபிராமி!
சென்னை: இயக்குநர் மற்றும் நடிகராக பாரி இளவழகன் நடித்துள்ள படம் ஜமா. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை இந்தப்படத்தில் அவர் பதிவு செய்துள்ளார். ஆக்ஷன், திரில்லர், ஹாரர் என தமிழ் சினிமா பாதை மாறியுள்ள நிலையில் நம்முடைய பாரம்பரிய கலாச்சாரத்தை மையமாக கொண்ட கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குநர்.
இந்தப் படத்தில் பாரி இளவழகனுடன் அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கேவிஎன் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் விடுதலை படத்திற்கு பிறகு மீண்டும் அழுத்தமான கேரக்டரில் சேத்தன் நடித்துள்ளார்.

ஜமா படம்: கூழாங்கல் படத்தை கொடுத்த எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் நிறுவனத் தயாரிப்பாக உருவாகியுள்ளது ஜமா படம். இந்தப் படத்தை இயக்கியுள்ள பாரி இளவழகன் படத்தின் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அனைவரும் ஹாரர், திரில்லர் கதைக்களங்களை கையிலெடுத்துவரும் சூழலில் நம்முடைய பாரம்பரிய கலைகளை மையமாக கொண்டு அழுத்தமான கதைக்களத்துடன் இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார் பாரி இளவழகன். தெருக்கூத்து கலைஞர்கள் குறிப்பாக பெண் வேடம் அணிபவர்களின் வாழ்க்கையை இந்தப் படம் மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகை அம்மு அபிராமி: படத்தில் நாயகியாக இணைந்துள்ள அம்மு அபிராமி இந்தப் படம் தன்னுடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறியுள்ளார். இத்தகைய கேரக்டர் தனக்கு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அம்மு அபிராமி, ஜமா தனக்கு மறக்க முடியாத படமாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சிறப்பான வாய்ப்பை கொடுத்த பாரி இளவழகனுக்கு நன்றி தெரிவித்துள்ள அம்மு அபிராமி, இசையமைப்பாளர் இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் கனவு இந்தப் படத்தின்மூலம் நிறைவேறியுள்ளதாக கூறியுள்ளார்.
டாம்பாய் கேரக்டர்: எந்த சூழ்நிலையிலும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசத் தயங்காத டாம்பாய் கேரக்டரில் இந்தப் படத்தில் தான் நடித்துள்ளதாகவும் அம்மு அபிராமி கூறியுள்ளார். பல நம்பிக்கைக்குரிய கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அம்மு அபிராமி. இவரது கதைத்தேர்வு ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள ஜமா படமும் அம்மு அபிராமிக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சேத்தன் நெகிழ்ச்சி: இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர் சேத்தனும் ஜமா படம் குறித்த தன்னுடைய உற்சாகத்தை பதிவு செய்துள்ளார். இதுபோன்ற அற்புதமான திரைப்படத்தை உருவாக்கியுள்ள இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்திற்கு பிறகு ஜமா படத்தில் வலுவான கேரக்டர் அமைந்துள்ளதாக சேத்தன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப்படம் திரையரங்குகளில் ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயத்தையும் தொடும் என்றும் அவர் கூறியுள்ளார்.படத்தில் அவர் தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











