நடிகருடன் பிரேக்கப்.. கிரிக்கெட் வீரருடன் காதல்? நொந்துபோன நடிகை.. திருமணம் குறித்து பரபர விளக்கம்!
சென்னை: கிரிக்கெட் வீரருடன் காதல் என தகவல் பரவிய நிலையில் நடிகை அனுஷ்கா அது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கில் வெளியான பூரி ஜெகன்னாத்தின் சூப்பர் என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.
அவரது நடிப்பில் வெளியான வரலாற்று ரீதியிலான படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக அருந்ததி, ருத்ரமாதேவி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

பாகுபலி
பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்து உலகப்புகழ் பெற்றார் அனுஷ்கா. பாகுபலி படம் லண்டனில் உள்ள பிரபல திரையரங்கில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார் அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடையை கூட்டினார் அனுஷ்கா.

நடிகருடன் காதல்
ஆனால் அதன்பிறகு எடை குறையாததால் பெரும் அவதிக்கு ஆளானார். இதனால் பல பட வாய்ப்புகளையும் இழந்தார். தற்போது 38 வயதான நடிகை அனுஷ்கா தொடர்ந்து கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார். ஏற்கனவே நடிகை அனுஷ்காவுக்கும் தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று தகவல் பரவியது.

இருவரும் மறுப்பு
இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக எடுத்த போட்டோக்கள் வெளியானது. இருவரும் சேர்ந்து அமெரிக்காவில் வீடு வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. பிரபாசும் அனுஷ்காவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல்களை இருவரும் மறுத்தனர்.

கிரிக்கெட் வீரருடன் லவ்
இதனை தொடர்ந்து அனுஷ்காவுக்கு தொழில் அதிபருடன் வீட்டில் திருமணம் பேசியிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதுவும் வெறும் வதந்தியாக போனது. அண்மையில் கிரிக்கெட் வீரர் ஒருவரை அனுஷ்கா காதலிப்பதாக தகவல் பரவியது. அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் ரஞ்சி போட்டிகளில் விளையாடுகிறார் என்றும் கூறப்பட்டது.

நடிகை விளக்கம்
இந்நிலையில் திருமணம் குறித்து பரவும் இதுபோன்ற தகவல்களுக்கு நடிகை அனுஷ்கா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், காதல், திருமணம் என்றெல்லாம் என்னைப்பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. ஏற்கனவே ஒரு தொழில் அதிபரை காதலிக்கிறேன் என்று கூறினார்கள்.

குறி வைத்த பேசுகிறார்கள்
பின்னர் டாக்டரை காதலிக்கிறேன் என்றும் பரப்பினார்கள். பிறகு என்னுடன் படங்களில் நடித்த நடிகர்களுடன் காதல் என்றார்கள், தற்போது கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறுகிறார்கள். இது எல்லாமே பொய், எல்லாமே வதந்தி. என்னை மட்டும் ஏன் இப்படி குறி வைத்து பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

கழுத்தை நீட்டுவேன்
தினமும் ஒவ்வொருவருடன் இணைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது. என்னுடைய கல்யாணம் குறித்து என் பெற்றோர் தான் முடிவு செய்வார்கள். அவர்கள் யாரை பார்த்து கையை காட்டுகிறார்களோ அவரிடம் கழுத்தை நீட்டுவேன், மற்றப்படி யாருடனும் காதலும் இல்லை ஒன்றும் இல்லை என்று பளிச்சென கூறியிருக்கிறார் நடிகை அனுஷ்கா.


Click it and Unblock the Notifications











