கல்யாணம் ஆகுமானே சந்தேகப்பட்டேன்.. பணத்தால் நிம்மதி கிடைக்காது.. மகன்கள் முன்னிலையில் விசித்ரா எமோஷனல்!
சென்னை: நடிகை, குணச்சித்திர நடிகை, கவர்ச்சி நடிகை என பல பரிமாணங்களை எடுத்த நடிகை விசித்ரா, ஒரு கட்டத்திற்கு மேல் திரை உலகை விட்டு மொத்தமாக விலகி, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவ்வப்போது சினிமாவிலும் சின்னத்திரையிலும் தலையைக் காட்டி வந்தாலும் பிக் பாஸ் சீசன் 7 இல் இவர் ஆடிய ஆட்டம் அவரது இன்னொரு பரிமாணத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியது. இந்நிலையில் அவரை கௌரவிக்கும் நிகழ்ச்சி கலாட்டா யூடியூப் சேனல் மூலம் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தனது கணவர் மற்றும் மூன்று மகன்களுடன் கலந்து கொண்ட நடிகை விசித்ரா பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், " 90களில் நான் நடித்துக் கொண்டு இருந்தபோது எனக்கு திருமணம் ஆகுமா என்று எல்லாம் நான் யோசித்து இருக்கிறேன். சினிமாத்துறையில் இருக்கிறோம் என்பதால் வெளியிடங்களுக்கு போகும்போது வி.ஐ.பி மரியாதை கிடைத்தாலும், குடும்பத்தில் கிடைக்கும் மரியாதை தான் முக்கியம். எனக்கு நல்ல கணவர் அமைவாரா? நல்ல குடும்பம் அமையுமா என்றெல்லாம் நான் யோசித்து இருக்கிறேன். இது மட்டும் இல்லாமல், ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றெல்லாம் இருந்தேன்.
திருமணமே வேண்டாம், சிங்கிளாகவே இருந்துவிடலாம் என்று முடிவெடுத்திருந்தேன். திருமணம் செய்து கொள்ளலாமா என்று எனது கணவர் கேட்ட பின்னர் கூட, பலமுறை நான் யோசித்தது, நம்மால் அந்த உறவையும் குடும்பத்தையும் பேண முடியுமா என கேட்டுக் கொண்டது தான். திருமணத்திற்குப் பின்னர் வாழ்க்கை மிகவும் சவாலானதாக மாறியது. ஒவ்வொரு முறையும் பல சவால்கள் வரும், அதையெல்லாம் நான் கடந்து இன்றைக்கு இங்கு வந்துள்ளேன். எனக்கு மிகவும் எமோஷனலாக உள்ளது, நான் கடந்து வந்த திருமண வாழ்க்கையை என்னால் விவரிக்க முடியவில்லை.

குடும்பம் முக்கியம்: ஒரு பெண் ஒரு துறையில் எந்த அளவுக்கு உயரிய பொறுப்பில் இருந்தாலும், உங்களுக்கு அன்பு காட்டும் படியான ஒரு கணவரும் உங்களுக்கென ஒரு உலகமும் குழந்தைகளும் மிகவும் முக்கியம். குடும்பமாக இருக்க வேண்டும் என இப்போது பெரும்பாலும் யாரும் நினைப்பது இல்லை. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. கூடுமானவரை பிரிந்து விடலாம் என்று யோசித்து வருகிறார்கள். கொஞ்சமாவது சகிப்புத் தன்மை வேண்டும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். அப்படி விட்டுக் கொடுத்துப் போனார்கள் என்றால் பல ஆண்டுகளுப் பின் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது மிகப்பெரிய வாழ்க்கையை கடந்து வந்துள்ளோம் என்ற நிம்மதி கிடைக்கும்.
பெருமை: உங்களது வெற்றியையும் பணம் புகழ் ஆகியவற்றை குடும்பத்துடன் தான் பகிர்ந்து கொள்ள முடியும். குடும்பங்கள் மிகவும் முக்கியம். இன்றைக்கு எனது கணவரும் குழந்தைகளும் என்னுடன் இருப்பது எனக்கு மிகவும் பெருமிதமாக உள்ளது. தொழில் ரீதியாக நமக்கு எதுவுமே இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், குடும்பம் உள்ளது என்ற நிம்மதி உள்ளது. என்னிடம் பணம் உள்ளது, பிசியாக நடித்துக் கொண்டு உள்ளேன். ஆனால் குடும்பம் இல்லை என்றால் நான் சந்தோஷமாக இருக்க மாட்டேன். இந்த காலகட்டத்தில் குடும்பத்துடன் இணைந்து இருப்பது என்பது மிகவும் முக்கியமானது" என்று பேசினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











