வருமானம் இல்லை... பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்: நடிகை சார்மிளா
புதிய பட வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதாக நடிகை சார்மிளா தெரிவித்துள்ளார்.
சென்னை: போதிய வருமானம் இல்லாததால் குடும்பச் செலவிற்கு கஷ்டப்படுவதாகவும், புதிய வாய்ப்புகளுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை சார்மிளா.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயினாக நடித்து தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை சார்மிளா. தமிழில் ஒயிலாட்டம் படம் மூலம் ஹீரோயின் ஆனவர். இவன் வேற மாதிரி படத்தில் நாயகியின் அம்மாவாக நடித்திருந்தார்.
திருமண வாழ்க்கையில் தொடர் தோல்வி காரணமாக தற்போது வயதான தாய் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார் இவர். சரியான படவாய்ப்புகள் இல்லாததால் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக ஒன் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் சார்மிளா தெரிவித்துள்ளார்.

அலட்சியம்:
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, "இளவயதில் கிடைத்த பட வாய்ப்புகளை பொறுப்பில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக அலட்சியம் செய்து விட்டேன். இதனாலேயே என் மீது தவறான இமேஜ் ஏற்பட்டுவிட்டது.

பொறுப்பாகி விட்டேன்:
ஆனால், நான் இப்போது அப்படியில்லை. மாறி விட்டேன். பொறுப்பாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறேன். ஆனால், எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் இப்போது இல்லை. மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே ஷூட்டிங் உள்ளது.

குடும்ப கஷ்டம்:
தற்போது படுத்த படுக்கையாக இருக்கும் வயதான அம்மாவையும், மகனையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன். மகனின் படிப்புச் செலவிற்கு நடிகர் விஷால் உதவி செய்கிறார். ஆனால், குடும்பச் செலவிற்கு போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன்.

புதிய வாய்ப்புகள்:
நான் அதிகம் சம்பளம் கேட்பேன் என தவறாக நினைத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என்னை அணுகுவதில்லை. ஆனால், நான் அப்படியில்லை. மற்ற வயதான நடிகைகளைப் போல் அம்மா வேடங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். எனவே, தமிழ் மற்றும் மலையாளத்தில் புதிய வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











