ரூ 25 லட்சத்துடன் திருணமனத்தன்று ஓட்டம் பிடித்த துணை நடிகை மணமகன்!

ஜெய்சூர்யா, பேரின்பம் உள்ளிட்ட தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாய்பிரியா (36). சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகர், நேரு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நங்கநல்லூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஸ்ரீராம் சர்மா (37) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தன்னை ஒரு சினிமா பைனான்சியர் என்று அறிமுகம் செய்து கொண்டு சாய் ப்ரியாவிடம் பழகி வந்தார். இது நாளடைவில் காதலானது. சினிமா பைனான்சியர் என்பதால் உன்னை வைத்து ஒரு படம் எடுக்கிறேன் என்றெல்லாம் சாய்ப்ரியாவிடம் ஆசை வார்த்தை கூறினாராம்.
ஒரு கட்டத்தில் சாய்பிரியாவை திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறினாராம். இதுகுறித்து தனது பெற்றோரிடம் பேசுமாறு கூறினாராம் சாய்ப்ரியா.
இதைத் தொடர்ந்து சாய்ப்ரியாவின் பெற்றோர்களிடம் ஸ்ரீராம் சர்மா பேசினார். இருவருக்கும் மார்ச் 21-ந் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமணத்தை சாலிகிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த மாதம் ஸ்ரீராம் சர்மாவின் அண்ணன் சென்று ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்து திருமண மண்டபத்தை பதிவு செய்தார். மண்டபத்திற்கு வாடகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம். ஆனால் தனது பேச்சு திறமையால் மீதி பணத்தை பிறகு தருகிறோம் என்று கூறி விட்டுச் சென்றுள்ளார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாய்ப்ரியாவிடம் ஸ்ரீராம் சர்மா ரூ.10 லட்சம் வாங்கினாராம். திருமண செலவுக்கு பணம் வேண்டும் என்று கூறி சாய்ப்ரியாவிடம் ஸ்ரீராம் சர்மா மேலும் ரூ.15 லட்சத்தை வாங்கி சென்றுள்ளார்.
தனக்கு திருமணம் நடக்கப் போகிறது என்ற எண்ணத்தில் சந்தோஷமாக இருந்த சாய்ப்ரியாவிற்கு 20-ந் தேதி ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது.
திடீரென போன் செய்த ஸ்ரீராம் சர்மா, "என்னுடைய தாயார் இறந்து விட்டார்; திருமணத்தை உடனே நிறுத்த வேண்டும்'' என்றாராம். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் அவரிடமிருந்து ஒரு போன் வந்ததாம். "என்னை போலீசார் வேறு தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும்'' என்று கூறி விட்டு போனை 'ஆஃப்' செய்து விட்டாராம்.
இதனால் மனம் உடைந்த சாய்ப்ரியா திருமண விருந்திற்காக ஏற்பாடு செய்த உணவை ரத்து செய்தார். அதற்கு பின்புதான் மண்டபத்தின் உரிமையாளர்களுக்கு திருமணம் நின்றதே தெரிய வந்தது.
தொடர்பு கொண்டு கேட்டபோது வீட்டில் சில பிரச்சினையால் திருமணம் நின்று விட்டது என்று ஸ்ரீராம் சர்மாவின் அண்ணன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஸ்ரீராம் சர்மா மீது சாய்ப்ரியா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஸ்ரீராம் சர்மாவை தேடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











