Disha Patani: திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு.. குற்றவாளிகளை என்கவுன்ட்டர் செய்த காவல்துறை!
உத்தரபிரதேசம்: பாலிவுட் நடிகை திஷா பதானியின் பரேலி வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காஜியாபாத்தில் கோல்டி ப்ரார் மற்றும் ரோஹித் கோதாரா கும்பலுடன் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு பேர் காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகை திஷா பதானியின் பரேலி வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படை (UP STF) இவர்களுக்கு கும்பலுடன் இருந்த தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளது.
ரவீந்திரா மற்றும் அருண் என்ற இந்த நபர்களை, STF-ன் நொய்டா பிரிவு மற்றும் டெல்லி காவல்துறையின் கூட்டுப் படை காஜியாபாத்தின் ட்ரோனிகா சிட்டியில் சுட்டுப் பிடிக்க முயற்சித்தது. இந்த துப்பாக்கிச்சூட்டின்போது, இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் இருந்து ஒரு க்ளாக், ஒரு ஜிகானா பிஸ்டல் மற்றும் பல தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

துப்பாக்கிச்சூடு: செப்டம்பர் 12 அன்று அதிகாலை 3.30 மணியளவில், இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திஷா பதானியின் பரேலி இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவரது தந்தை, அவர்கள் 8 முதல் 10 முறை வீட்டை நோக்கி சுட்டதாகத் தெரிவித்தார். இந்தச் செயலுக்கு வெளிநாட்டுத் தயாரிப்பு பிஸ்டல் பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் காவல்துறையில் அளித்த புகாரில் தெரிவித்திருந்தார். சமூக ஊடக பதிவு ஒன்று, இந்தத் தாக்குதலுக்கு தாதா கோல்டி ப்ராரின் கூட்டாளிகள் பொறுப்பேற்றதாகக் கூறியது. பின்னர் அந்த இடுகையும், கணக்கும் நீக்கப்பட்டன. ஆன்மீக குருக்களான பிரேமானந்த் மகராஜ் மற்றும் அனிருத்தாச்சார்ய மகராஜ் ஆகியோருக்கு எதிராக இழிவான கருத்துக்கள் தெரிவித்ததற்குப் பழிவாங்கும் செயலாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அந்தப் பதிவு கூறியது.
காவல்துறையில் புகார்: இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், திஷா பதானியின் தந்தைக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்து உறுதியளித்தார். ஓய்வு பெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெகதீஷ் சிங் பதானி, இந்த திகிலூட்டும் அனுபவம் குறித்து தனது கவலைகளைத் தெரிவித்தார்.ஜெகதீஷ் பதானி, நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து, தங்கள் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டதாகக் கூறினார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தால் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். அவர் அளித்த புகாரை அடுத்து, காவல்துறை தீவிரமாக விசாரித்து வந்தது.

என்கவுன்ட்டர்: இப்படி இருக்கையில் காவல்துறையின் விசாரணையை அடுத்து, அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய ரவீந்திரா மற்றும் அருண் ஆகியோரை காசியாபாத்தில் சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்தது. இவர்களை சுற்றி வளைத்ததில் உத்தர பிரதேச காவல்துறை மற்றும் டெல்லி காவல்துறை என இரண்டு மாநில காவல்துறையும் இணைந்து செயல்பட்டனர். அப்போது இவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவரும் காயம் அடைந்துள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் அவர்கள் இறந்துவிட்டதாக காவதுறை தெரிவித்துள்ளது. இது குறித்த பேச்சு தற்போது பாலிவுட்டில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











