பல முறை திருமணம் நடந்துவிட்டது.. வதந்தி பரப்பாதீர்கள்... செம காண்டான தனுஷ் பட நடிகை
பெங்களூர்: கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் திவ்யா ஸ்பந்தனா. சிம்புவுடன் குத்து படத்தில் நடித்ததிலிருந்து தமிழில் அவர் குத்து ரம்யா என்று அழைக்கப்படுகிறார். அவரது உண்மையான பெயர் திவ்யா ஸ்பந்தனா. குத்து தவிர்த்து தமிழில் அவர் கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகையாக மட்டுமின்றி மக்களவை உறுப்பினராகவும் இருந்த அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டமான போஸ்ட் ஒன்றை போட்டிருக்கிறார்.
பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர் திவ்யா ஸ்பந்தனா. தந்தை பிஸ்னெஸ்மேன், தாய் காங்கிரஸில் முக்கிய பொறுப்பில் இருந்தார். நடிகையாக ஆசைப்பட்ட திவ்யாவுக்கு 2003ஆம் ஆண்டு புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றதையடுத்து தமிழில் சிம்பு நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான குத்து திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கிடைத்தது. குத்து படத்தில் அவர் ரம்யா என்ற பெயரில் அறிமுகமானார். அப்போதிருந்து அவர் குத்து ரம்யா என்று அழைக்கப்படுகிறார்.

தொடர் வாய்ப்புகள்: குத்து படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றது. குத்து படத்துக்கு பிறகு கிரி படத்தில் நடித்தார். அந்தப் படமும் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் தமிழில் அவர் நினைத்தது போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேசமயம் கன்னடத்தில் வாய்ப்புகள் அவருக்கு தொடர்ந்து கிடைத்தன. அதனை பயன்படுத்திக்கொண்டு அங்கு முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் திவ்யா ஸ்பந்தனா.
தமிழிலும் ஒரு ரவுண்ட்: தொடர்ந்து கன்னடத்தில் பிஸியாக நடித்துவந்த திவ்யாவுக்கு வெற்றிமாறன் தான் இயக்கிய முதல் படமான பொல்லாதவன் படத்தில் ஹீரோயின் சான்ஸ் கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதற்கு பிறகு வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட். எனவே தமிழில் பெரும் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு அடுத்ததாக ஜீவா நடித்த சிங்கம் புலி படத்தில் மட்டும்தான் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் தோல்வியடைய கோலிவுட் திவ்யாவை ஒட்டுமொத்தமாக மறந்தது.
அரசியல்வாதி: திவ்யா ஸ்பந்தனா நடிகையாக மட்டுமின்றி தனது தாய் மாதிரி அரசியலிலும் அடியெடுத்து வைத்தார். கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் காங்கிஸ் சார்பாக போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். அரசியலில் பிஸியானதால் சினிமாவை ஒதுக்கிய அவர் கடைசியாக 2023ஆம் ஆண்டு Hostel Hudugaru Bekagiddare என்ற படத்தில் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். அதில் கொஞ்சம் கிளாமராகவும் நடித்திருந்தார்.
வதந்தி: திவ்யாவை சுற்றி ஏகப்பட்ட வதந்திகளும் பரவ ஆரம்பித்தன. கடந்த வருடம்கூட அவர் உயிரிழந்துவிட்டார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ஆனால் அந்தத் தகவல் வெளியான சமயத்தில் திவ்யா வெளிநாட்டில் இருந்தார். அதனையடுத்து திவ்யா ரகசிய திருமணம் செய்துகொண்டார் என்றும் பல முறை தகவல்கள் பரவின. ஆனால் அந்தத் தகவல்கள் வெறும் வதந்தி என்பது உறுதியானது.
காண்டான திவ்யா: இந்நிலையில் அவர் திருமணம் செய்துகொண்டார் என்று மீண்டும் தகவல்கள் பரவின. அதனை மறுத்து காட்டமாக பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் திவ்யா. அவரது தனது பக்கத்தில், "எனக்கு பல முறை மீடியாக்கள் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். எத்தனை முறை என்பதை நான் மறந்தும்விட்டேன். நான் ஒருவேளை உண்மையில் திருமணம் செய்துகொண்டால் நானே சொல்வேன். அதிகாரப்பூர்வமற்ற சோர்ஸ்களிடமிருந்து வரும் வதந்திளை பரப்புவதை நிறுத்துங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











