என்னோட கல்யாண ஆல்பத்தை பார்க்கவே மாட்டேன்.. பழைய மெமரீஸ் பிடிக்காது.. பாத்திமா பாபு ஓபன்!
சென்னை: 80களில் மிகப்பிரபலமான செய்தி வாசிப்பாளரான பாத்திமா, தன்னுடைய கணவர் பாபுவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். மிகவும் பிரபலமான இவரை தமிழ்நாடே கொண்டாடிய நிலையில், சினிமாவிற்கு சிறிதும் தொடர்பில்லாத பாபுவை திருமணம் செய்துக் கொண்டார் பாத்திமா.
தன்னுடைய கணவருடன் 35 ஆண்டுகள் தொடர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்துள்ள பாத்திமா -பாபு தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், 35 ஆண்டுகள் கழித்து பாபுவுடனான தன்னுடைய காதல், திருமண வாழ்க்கை உள்ளிட்டவற்றை பாபுவுடன் இணைந்து பேசியுள்ளார் பாத்திமா பாபு.

நடிகை பாத்திமா பாபு: 80களில் அதிகமான சேனல்கள் இல்லாத நிலையில், சில செய்தி வாசிப்பாளர்களே ரசிகர்களை அதிகமாக கவர்ந்தனர். அவர்களில் ஒருவர் பாத்திமா பாபு. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்த இவர், தன்னுடன் பணியாற்றிய பாபு என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 35 ஆண்டுகளை கடந்து சக்சஸ்ஃபுல்லாக இருந்து வருகிறது. இந்நிலையில் பாபுவுடனான தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து பாத்திமா தன்னுடைய கணவருடன் இணைந்து தற்போது பேசியுள்ளார். தன்னுடைய எதிர்பார்ப்பிற்கு தக்கபடி பாபு இல்லாவிட்டாலும் ஒரு நல்ல மனிதர் என்ற வகையில் அவரை திருமணம் செய்துக் கொள்ள தான் சம்மதித்ததாக பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.
பாத்திமாவிடம் பிரபோஸ் செய்த பாபு: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இருவரும் இணைந்தே வேலை செய்த நிலையில், தான் பேட்மிண்டன் விளையாடும்போது தன்னை பாபு பார்த்ததாகவும் அப்போதும் பெரிய ஈடுபாடு இல்லை என்றும் ஆனால் ஒருமுறை தன்னுடைய சொந்த ஊருக்கு பாத்திமா சென்ற நிலையில், அந்த பிரிவுதான் பாபுவிற்கு பாத்திமா மீதான காதலை உறுதி செய்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அவர் பாத்திமாவிடம் பிரபோஸ் செய்த நிலையில் அவர் பதிலுக்கு காதலை ஏற்காமல் திட்டித் தீர்த்துள்ளார். இதையடுத்து அவர் மயங்கி விழுந்துள்ளார். பாபுவிற்கு டென்ஷனானால் மயங்கிவிழும் பாதிப்பு இருந்த நிலையில், இதையடுத்தே பாபுவின் காதலை ஏற்றுள்ளார் பாத்திமா.
35 ஆண்டுகால திருமண வாழ்க்கை: இவர்களின் 35 ஆண்டுகால திருமண வாழ்க்கையில், இருவரும் அவரவர் மதத்திலேயே நீடித்து வருகின்றனர். யாரும் யாருக்காகவும் மதம் மாறவில்லை. ஆனால் ஆரம்பத்தில் பொட்டு வைத்துக் கொள்ளாத தான், தனக்கு பிடித்திருந்ததால் பொட்டு வைத்துக் கொண்டதாகவும், தொடர்ந்து தாலியும் அணிந்துக் கொண்டதாகவும் பாத்திமா தெரிவித்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய திருமணத்திற்கு பிறகு, தமிழ்நாடே உங்களை காதலித்தது, ஏன் பாபுவை திருமணம் செய்துக் கொண்டீர்கள் என்று ரசிகர்கள் கேட்டதாகவும், என்னிடம் யாரும் சொல்லவில்லை என்றும் பாபு மட்டும்தான் காதலை சொன்னதாக பதிலளித்ததாகவும் பாத்திமா தெரிவித்துள்ளார்.
திருமண ஆல்பம் பார்க்க பிடிக்காது: இந்த சந்திப்பின்போது தன்னுடைய திருமண ஆல்பத்தை பாபு ஆசையுடன் திருப்பி பார்த்ததை பார்க்க முடிந்தது. ஆனால் தன்னுடைய திருமண ஆல்பத்தை தான் பார்த்து 30 ஆண்டுகள் ஆனதாக பாத்திமா தெரிவித்துள்ளார். தனக்கு மெமரீஸ் பிடிப்பதில்லை என்றும் அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் இந்த நொடியில் வாழும் வாழ்க்கையையே தான் நேசிப்பதாகவும் பாத்திமா பாபு தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கணவர் தன்னுடைய கேரியர் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பிரமோஷன்களை நிராகரித்ததாகவும் பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











