பக்கத்திலேயே இருந்து பார்த்தவ நான்.. கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது.. விஜய்க்கு நடிகையின் அட்வைஸ்
சென்னை: விஜய் தற்போது அரசியலில் கவனம் செலுத்திவருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறார். கண்டிப்பாக விஜய்யை வெல்ல வைத்து கோட்டைக்குள் அனுப்ப வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறார்கள் தொண்டர்களாகிய அவரது ரசிகர்கள். அவரும் அதற்கான முழு திட்டத்தோடு களமாடிவருகிறார். இந்தச் சூழலில் விஜய்க்கு நடிகை இந்திரஜா அட்வைஸ் செய்திருக்கிறார்.
கோலிவுட்டில் மிகப்பெரிய வசூல் செய்யும் ஹீரோக்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான GOAT திரைப்படம்கூட 300 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. வரிசையாக அவர் நடித்த படங்கள் எல்லாமே அசால்ட்டாக 200 கோடி ரூபாய்வரை வசூலிக்கின்றன. இதனால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் கடந்த சில காலமாகவே தொடர்ந்து கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் விஜய்: ஆனால் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். தளபதி 69 என்று இப்போதைக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகும் அவர் அரசியலில் முழு கவனத்தையும் செலுத்துகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் இப்போதே 90 சதவீத அரசியல்வாதியாக மாறிவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் சினிமாவிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்திருப்பது சின்ன சோகத்தையும் கொடுத்திருக்கிறது.
விளாசும் விஜய்: முதலில் விக்கிரவாண்டியில் வைத்து தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அதில் தனது கொள்கை, அரசியல் எதிரி உள்ளிட்டவைகளை விளக்கினார். பிறகு எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அதிலும் அரசியல் ரீதியான பேச்சுக்களை முன்வைத்தார். இந்த இரண்டு இடங்களிலுமே அவர் நேரடியாகவும், மறைமுகமாகவும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அவருக்கு எதிராக திமுகவினர் களமாட ஆரம்பித்திருக்கிறார்.
பரந்தூர் பயணம்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் சென்ற அவர், அங்கு விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் 13 கிராம மக்களை சந்தித்தார். பிறகு பிரசார வாகனத்தில் நின்றபடி பேசிய அவர், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. விமான நிலையம் பரந்தூரில் வர வேண்டாம் என்றுதான் சொல்கிறேன் என குறிப்பிட்டார். விஜய்யின் பரந்தூர் பயணமும், அங்கு அவரது பேச்சும் தமிழ்நாடு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்து எங்கே?: இதற்கிடையே விஜய் Work From Home அரசியல் செய்கிறார் என்ற விமர்சனங்கள் வலுவாக வைக்கப்பட்டன. அதனை உடைக்கும் விதமாகத்தான் அவர் பரந்தூருக்கு சென்றதாக கருதப்படுகிறது. பரந்தூர் பயணத்தை முடித்திருக்கும் அவர் அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலுக்கு சென்று அங்கு தண்ணீரில் மலம் கழிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசுகிறார். இப்படி முழுக்க முழுக்க அரசியல் தலைவராக மாறிவருகிறார் விஜய்.
நடிகையின் அட்வைஸ்: இந்நிலையில் ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்திரஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "கூட்டத்தை பார்த்து மட்டும் நம்பிவிடக்கூடாது. ஏனெனில் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறும் என்ற எந்த நிச்சயமும் இல்லை. மக்கள் போடும் அரசியல் கணக்கு வேறு மாதிரியாகத்தான் இருக்கும். சிரஞ்சீவியும், பவன் கல்யாணும் கட்சி தொடங்கியபோது பக்கத்தில் இருந்து பார்த்தவள் நான். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் விஜய்யிடம் இருக்கிறது. ஆனால் அவரை அரசியலில் சரியாக வழிநடத்தக்கூடிய ஆள் இல்லை. விஜய்க்கு இப்போது அதுதான் தேவை. மற்றபடி அவருக்கு வேறு எதுவும் தேவை கிடையாது" என்றார்.


Click it and Unblock the Notifications











