குஷ்பு மகளுக்கே இப்படி ஒரு நிலமையா? தாமதமாகும் பட வாய்ப்பு.. அவந்திகா வருத்தம்!
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இருக்கும் நடிகை குஷ்புவின் வாரிசான அவந்திகா, நடிகைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சில வரைமுறைகள் இருக்கிறது. அந்த வரையறைக்குள் நான் இல்லாததால் பட வாய்ப்புகள் தாமதமாகி வருவதாக தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
1980 ஆண்டு குழந்தை நட்சத்திரமாக இந்தி சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை குஷ்பு. இதனை தொடர்ந்து 1990ல் வருஷம் 16 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான குஷ்பு தமிழ் ரசிகர்களின் பிடித்தமான நடிகையாக மாறிப்போனார். இதைத்தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார்,பிரபு என ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.

நடிகை குஷ்பு சுந்தர்: தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு, சுந்தர் சி இயக்கிய முறைமாமன் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை குஷ்பு தற்போதும் சினிமா, அரசியல் என படு பிசியாக இருக்கிறார். அண்மையில் குஷ்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், அவந்திகாவிற்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பது ஆசை, இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். விரைவில் அவர் திரையில் வருவார் என்றார்.

உயரமே தடையாக உள்ளது: இந்நிலையில், குஷ்புவின் மகள் அவந்திகா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எந்த ஒரு மொழி படத்திலும் நான் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். தற்போது நல்ல கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவை நிச்சயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நடிகைகள் என்றால் இந்த நிறத்தில் இருக்க வேண்டும், அந்த உயரத்தில் இருக்க வேண்டும் என வரையறையில் இங்கு உள்ளது. அந்த வரையறைக்குள் நான் இல்லை என்பது எனக்கு தெரியும். என் உயரமே எனது நடிப்பு வாய்ப்புக்கு தடையாக உள்ளது. அதிகப்படியான உயரத்தால் எனக்கு படம் வாய்ப்பு வரவில்லை. இதனால் பட வாய்ப்புக்காக நான் காத்துக் கொண்டிருக்கின்றேன்.
ரசிகர்கள் வாழ்த்து: என்னுடைய 15 வயதிலிருந்து அதிகப்படியான உடல் எடையுடன் குண்டாக இருந்தேன், கண்ணாடி அணிந்திருந்தேன். ஆனால், அவற்றிலிருந்து கடுமையாக உடற்பயிற்சி செய்து மெல்ல மெல்ல உடல் எடையை குறைத்து ஒரு நடிகைக்கான அனைத்தையும் தயாராக்கிக் கொண்டேன். எனது பெற்றோர் சினிமாவில் நட்சத்திரங்களாக இருப்பதால், என்னால் எளிதாக வாய்ப்பை உருவாக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், அதனை நான் செய்ய விரும்பவில்லை என் பெற்றோருக்கு என் முயற்சிகள் தான் மகிழ்ச்சி அடைகின்றனர் என அந்த பேட்டியில் அவந்திகா பேசி உள்ளார். இந்த பேட்டியைப் பார்த்த ரசிகர்கள் பலர் என்னத்தான் வாரிசின் மகளாக இருந்தாலும், அதன் மூலம் சினிமாவிற்குள் வரக்கூடாது என்று நீங்கள் நினைப்பது உண்மையில் பெருமைப்படக்கூடிய விஷயம், நிச்சயம் உங்கள் முயற்சியால் உச்சத்தை அடைவீர்கள் என்று பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











