பிரசாந்த்துடன் பழகினாலே அப்படித்தான்.. அவ்வளவு சீக்கிரம் விடமாட்டார்.. நடிகை கிரண் ஓபன் டாக்
சென்னை: ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவருக்கான பட வாய்ப்புகள் சட்டென்று குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் ஆள் காணாமல் போய்விட்டார். இதனையடுத்து ஆம்பள உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார். இந்தச் சூழலில் நடிகர் பிரசாந்த் குறித்து கிரண் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைதான் கிரண் ரத்தோட். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்தவர் தமிழில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். சரண் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த அந்தப் படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. சரண் இயக்கியிருந்த அந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏவிஎம் தயாரிப்பில் சில வருடங்கள் படங்கள் எதுவும் வராமல் இருந்த சூழலில் ஜெமினி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது.
அடுத்தடுத்த பட வாய்ப்புகள்: பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவான ஜெமினி அதிரிபுதிரி ஹிட்டடித்தது. முதல் படமே மெகா ஹிட்டானதால் அறிமுகமாகியிருந்த கிரணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதனை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார். இருந்தாலும் கிரண் ஒரு கிளாமர் ஹீரோயின் என்ற முத்திரை மட்டும் அவரை விட்டு விலகாமல் இருந்தது. அதை மாற்றுவதற்கு ஒரு படத்துக்காக காத்திருந்தார் கிரண்.

அன்பே சிவம் கிரண்: அப்படிப்பட்ட சூழலில்தான் சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான அன்பே சிவம் திரைப்படம். இன்றுவரை கல்ட் க்ளாசிக் படமாக அன்பே சிவம் கொண்டாடப்படுகிறது. அப்படத்தில் கிரண் கமிட்டானதும் அக்காலகட்டத்தில் பலரும் ஆச்சரியம்தான் பட்டனர். ஆனால் நீங்கள் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதுபோல் தனது நடிப்பில் அதகளம் செய்திருந்தார் கிரண். தொடர்ந்து அஜித்துடன் வில்லன், பிரசாந்த்துடன் வின்னர் படங்களில் நடித்த அவருக்கு மார்க்கெட் சட்டென சரிந்தது.
மார்க்கெட்டை இழந்த கிரண்: மார்க்கெட் சரிந்ததை அடுத்து ஒரு சில படங்களில் நடித்த அவர் விஜய்யுடன் திருமலையில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன் பிறகு முழுவதுமாக ஒதுங்கியிருந்த அவர் சுந்தர் சியின் ஆம்பள படத்தில் நடித்தார். இப்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் அவர்; ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்துவருகிறார். அந்த ஆப்பும் ஒரு விவகாரமான ஆப் என்றே பலராலும் கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட விஷயங்களுக்காக அவர் பணம் வசூலிப்பதாகவும் ஒரு தகவல் ஓடியது.
பிரசாந்த் பற்றி கிரண்: இந்நிலையில் சமீபத்தில் கிரண் ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் அவர் பிரசாந்த் குறித்து பேசுகையில், "பிரசாந்த் மிகச்சிறந்த மனிதர். ஒருமுறை அவரது நட்பு வட்டத்துக்குள் நாம் சென்றுவிட்டால் நம்மை அக்கறையோடு பார்த்துக்கொள்வார். விடவே மாட்டார். நாமே பேசாவிட்டாலும் அவரே நம்மை அழைத்து நலம் விசாரிப்பார். அவர் தமிழ் சினிமாவில் நல்ல மனிதார்" என்றார். கிரணின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெட்னாகியிருக்கிறது.
பிரசாந்த்தின் இப்போதைய படங்கள்: இதற்கிடையே பிரசாந்த் அந்தகன் படத்தில் நடித்து மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமின்றி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான GOAT படத்திலும் முக்கியமான ரோல் ஒன்றை ஏற்றிருந்தார். இப்போது அவர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவும் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











