இது பெண்களுக்கான நேரம்.. மீடூ பற்றி தைரியமாகப் பேசும் லைலா!
மும்பை: ஆண்களுக்காகவே பெண்கள் என நினைக்கும் ஆண்களுக்கு எதிராக பெண்கள் கிளம்பும் நேரம் இது என நடிகை லைலா தெரிவித்துள்ளார்.
விஜயகாந்தின் கள்ளழகர் படம் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லைலா. பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து தன் குழந்தைத் தனமான முகத்தினால் வசீகரித்தார்.
2006க்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை. திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

கதாபாத்திரம்
திருமணத்திற்கு பிறகு நடிக்கும் எண்ணம் இல்லையா எனக் கேட்கப்பட்டதற்கு, " எனக்கு நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கிலிருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் சுவாரஸ்யமாக இல்லை. நான் இப்போது மிகக் கவனமாக சுவாரஸ்யமான கதாபாத்திரங்களைப் பண்ண வேண்டும் என நினைக்கிறேன். இப்படித்தான் நடிப்பேன் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. நெகட்டிவ் பாத்திரமோ, நகைச்சுவை பாத்திரமோ எதுவானலும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். அதுபோன்ற கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன் என கூறினார்.

தயாரிப்பு போர்
நடிகையாக இருந்த லைலாவுக்கு, படம் இயக்க வேண்டும் என்றும் ஆசை இருக்கிறதாம். எதாவது ஒரு விஷயம் அவரை அட்ராக்ட் செய்தால் நிச்சயமாக அதை படமாக எடுக்கும் திட்டம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நிச்சயமாக படத்தயாரிப்பு தொடர்பான வேலைகளில் இறங்க மாட்டேன் என்றும், அது மிகவும் போரான வேலை எனவும் அவர் கூறினார். மேலும், தற்போதைய தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாகவும், பெண்களை மையப்படுத்தும் படங்கள் அதிகமாக வரத்தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் நேரம்
மீடூ பற்றி கருத்து தெரிவித்த லைலா, இப்போது வரக்கூடிய செய்திகள் பலவும் பயங்கரமாக உள்ளது. இதுபோன்ற விஷயங்களுக்கு முடிவுகட்ட பெண்கள் களத்தில் இறங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லா துறைகளிலும் பெண்கள் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கும் விஷயம். சினிமாத்துறை மட்டுமல்லாமல், கார்ப்பரேட், அரசியல் என எல்லா இடங்களிலுமே இது நடக்கிறது. இது ஆண்களின் சுயலாபத்திற்காக பெண்களை பயன்படுத்திக் கொண்டதற்க்கு எதிராக பெண்கள் நிற்கும் காலம். ஒரு ஆண் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தல் என்பது இழிவானது மற்றும் பெண்ணை குறைத்து மதிப்பிடுவது ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம்
பெண்களின் போராட்டம் குறித்து லைலா தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். முன்னுதாரணமாக இருக்கும் பல பெண்களை பார்த்த பிறகு இப்படி ஒரு புத்தகத்தை எழுதும் எண்ணம் வந்ததாக அவர் சொல்கிறார். சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு புத்தகத்தை எழுதி வருவதாகவும், அடுத்த ஆண்டு அப்புத்தகம் வெளியாகும் எனவும் லைலா தெரிவித்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான லைலாவுக்கு அம்மாவாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், வீட்டு வேலைக்கு ஆள் வைக்காமல் அவரே குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதாகவும், அது ஒவ்வொரு அம்மாவின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











