எம்ஜிஆர் தான் ட்ரெயின் செஞ்சாரு.. அவரை கேட்டுத்தான் மற்ற ஹீரோக்களுடன் நடித்தேன்.. நடிகை லதா ஓபன்!
சென்னை: 70கள், 80களில் முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை லதா. நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர்தான் தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் லதாவை அறிமுகம் செய்தார்.
முதல் படத்திலேயே எம்ஜிஆர் ஜோடியாக நடித்த லதா, தொடர்ந்து ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்தபோது தன்னுடைய அம்மாவிற்கு சிறிதும் விருப்பம் இல்லை என்றும் ஆனால் எம்ஜிஆர் உள்ளிட்டவர்களின் வற்புறுத்தலையடுத்து அவர் சம்மதித்ததாகவும் லதா தெரிவித்துள்ளார்.

நடிகை லதா: நடிகை லதா 70கள் மற்றும் 80களின் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப்படங்களில் பிசியான நடிகையாக இருந்தவர். கடந்த 1973ம் ஆண்டில் எம்ஜிஆர் லீட் கேரக்டரில் நடித்திருந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர், அப்போது 9வது வகுப்பு படித்துக் கொண்டிருந்துள்ளார். இவரது புகைப்படம் உலகம் சுற்றும் வாலிபன் டீமில் காட்டப்பட, புதுமுகம் ஒருவரை தேடிக் கொண்டிருந்த எம்ஜிஆர், தன்னுடைய அம்மாவை கன்வின்ஸ் செய்து தன்னை நடிக்க வைத்ததாக லதா தனது பேட்டியில் கூறியுள்ளார். தான் முதல்முறை எம்ஜிஆரை பார்த்தபோது அவர் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக லதா தன்னுடைய வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பயிற்சி கொடுத்த எம்ஜிஆர்: தொடர்ந்து தனக்கு எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்திலேயே நடிப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் தான் தன்னுடைய அறிமுகப் படத்திலேயே ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சென்றது மறக்க முடியாத நிகழ்வு என்றும் லதா தெரிவித்துள்ளார். தனக்கு நடிப்பில் மட்டுமில்லாமல் நடனம், பாடி லேங்குவேஜ் உள்ளிட்ட பல விஷயங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் லதா பெருமையுடன் தெரிவித்துள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக தன்னை 5 வருடம் கான்டிராக்ட் போட்டு ஒப்பந்தம் செய்ததாகவும் லதா தெரிவித்துள்ளார். தான் அறிமுகம் செய்யும் நடிகைகளின் கால்ஷீட்டிற்காக தானே காத்திருக்கும்படி நேர்வதால் அவர் இப்படி ஒப்பந்தம் போட்டதாகவும் லதா குறிப்பிட்டுள்ளார்.
59 ஆண்டுகால சினிமா வாழ்க்கை: தான் சினிமாவில் 72ம் ஆண்டிலிருந்து நடித்து வருவதாகவும் ஏறக்குறைய 59 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகவும் லதா பெருமையுடன் தெரிவித்துள்ளார். தன்னுடைய முதல் படத்திலேயே எம்ஜிஆர் இயக்கத்தில் நடித்ததாகவும் அந்தப் படத்தில் வித்தியாசமான ஆங்கிள்களை எம்ஜிஆர் முயற்சி செய்ததாகவும் ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்ததாகவும் லதா தெரிவித்துள்ளார். தற்போதும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக அந்தப் படம் உள்ளதாகவும் லதா கூறியுள்ளார். வெளிநாட்டிற்கு தான் படக்குழுவினருடன் சென்றதாகவும், தன்னுடைய அம்மா, எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் பொறுப்பில் தன்னை விட்டதாகவும் லதா கூறியுள்ளார்.
காபி போட்டு கொடுத்த ஞானகி அம்மா: இதனிடையே, வெளிநாட்டில், காலை 5.30 மணிக்கு காபியுடன் ஜானகி அம்மா தன்னை எழுப்புவார் என்றும் அவர் முதலமைச்சராக ஆனபோதும், தன்னை அரசியலில் ஈடுபட அழைத்ததாகவும் லதா தெரிவித்துள்ளார். இதனிடையே, எம்ஜிஆரும் மற்றவர்களுடன் அதிகமாக சிரித்து பேசக் கூடாது என்றும் அப்படி பேசினால் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வார்கள் என்று தன்னிடம் கூறுவார் என்றும் லதா தெரிவித்துள்ளார். ஆனால் சிறுவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று தனக்கு அறிவுறுத்துவார் என்றும் லதா கூறியுள்ளார்.
எம்ஜிஆர்தான் ஆசான்: அவரை கேட்டுத்தான் தான் மற்ற மொழிப் படங்களிலும் நடித்ததாகவும் லதா தெரிவித்துள்ளார். தெலுங்கில் நாகேஷ்வரராவ், என்டி ராமாராவ், மலையாளத்தில் பிரேம் நசீர், மது உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்ததாகவும் லதா கூறியுள்ளார். தொடர்ந்து தமிழில் கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடனும் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதும் சின்னத்திரையில் நடித்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்திற்கும் எம்ஜிஆர்தான் காரணம் என்றும் அவர் தன்னுடைய ஆசான் என்றும் கூறியுள்ளார். தற்போதும் தன்னை எம்ஜிஆர் லதா என்றுதான் ரசிகர்கள் அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











