நடிகை லீனா மரியா பாலுக்கு ஜாமீன்!

பெங்களூரைச் சேர்ந்த சுகாஷ், கர்நாடக மாநில அரசு மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களின் உறவினர் என தன்னைக் கூறிக் கொண்டு பலரை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கான ரூபாயை வாங்கி, மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது நண்பரான கேரள நடிகை லீனா மரியா பாலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏராளமான வழக்குகள் சுகாஷ் மற்றும் லீனா மீது பதிவு செய்யப்பட்டுத.
கடந்த மே மாதம் லீனா மரியா பாலை டெல்லி பண்ணை இல்லத்தில் சென்னை போலீஸார் கைது செய்தனர். அப்போது நூலிழையில் தப்பிவிட்டார் சுகாஷ்.
சென்னை கொண்டுவரப்பட்ட லீனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் பலமுறை மனு செய்தும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லீனா மரியா பால் ரூ.2 லட்சத்துக்கான சொந்த பிணைத் தொகை செலுத்துவதுடன், தலா ரூ.1 லட்சத்துக்கான இரண்டு நபர்களின் உத்தரவாதத்தை அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











