பணம் இருந்தது.. சொந்தம் இல்லை.. புற்றுநோயுடன் போராடிய மனிஷா கொய்ராலா!
சென்னை: நடிகை மனிஷா கொய்ராலா, 1989ஆம் ஆண்டு பெரி பெத்தவுலா என்ற நேபாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக மாறிய இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த போது சந்தித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
நேபாள நாட்டில் பிறந்தவரான மனிஷா கொய்ராலா கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான சவுதாஹர் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்த இவர், மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்று சொன்னதும் ஷாக்கான மனிஷா முதலில் நோ சொல்லிவிட்டார். ஆனால்,பலர் மணிரத்னம் பற்றி சொல்லிய பிறகு அந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

மனிஷா கொய்ராலா பேட்டி: அதன்பிறகு முதல்வன், உயிரே, இந்தியன், ஆளவந்தான் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மனிஷா கொய்ராலா தமிழில் பிரபலமான நடிகையாக மாறினார். தமிழ், இந்தி, தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர், பேஸ்புக் மூலம் நண்பரான ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த வாழ்க்கையும் பாதியில் முறிந்து போனதால், மன அழுத்தத்தில் இருந்தார். இதையடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை எடுத்து ஒருவழியாக மீண்டு, படத்தில் நடித்து வருகிறார்.
யாரும் இல்லை: இந்நிலையில்,ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மனிஷா கொய்ராலா, புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருந்து போது தனக்கு நடந்த துயரங்கள் குறித்து பேசி உள்ளார். அதில், 'அனைவரும் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனமாக இருங்கள், எனக்கு நிறைய உறவினர்கள், பெரிய குடும்பம் இருக்கிறது. அனைவருமே வசதியானவர்கள் தான், ஆனால் நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது, என்னுடன் யாரும் இல்லை, அனைவரும் விலகி விட்டார்கள்.
அதே மன அழுத்தம்: என் நண்பர்கள் கூட அப்போது என்னுடன் இல்லை. ஆனால், அப்போது என்னுடன் இருந்தது என் பெற்றோர், என் சகோதரர், சகோதரிகள் தான். புற்றுநோய் பாதித்தபோது எனக்கு பல விஷயங்கள் நடந்தன. நோய் பாதிப்புக்கு முன்பு இருந்த போல, இப்போது என் உடல் இல்லை. என்னால் இப்போது எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. இப்போதும் நான் மன அழுத்தத்தோடுதான் இருக்கிறேன், அதே வலியோடுதான் என் வேலைகளை செய்கிறேன் என்று மனிஷா கொய்ராலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











