நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது... ஏப்ரல் 4 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு!
சென்னை : பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்த வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீரா மிதுன்
சர்ச்சைக்கு பெயர்போன மீரா மிதுன், 2016ல் போலியான வயதை கொடுத்து மிஸ் சவுத் இந்திய அழகிப்பட்டத்தை வென்றதாக கூறி அவரது அழகிப்பட்டம் பறிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கினார். போலியாக அழகிப்போட்டிகளை நடத்துவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும் இவர்மீது புகார்கள் உள்ளன.

பிக்பாஸ் போட்டியாளர்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன், சக போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். மேலும் இயக்குநர் சேரன்மீது அவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்த அவர் வெளியேற்றப்பட்டார். இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

அவதூறு வீடியோக்கள்
தொடர்ந்து சமூக வலைதளஙகளில் பலர் குறித்து அவதூறு வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன் சமீபத்தில் பட்டியலினத்தவர் குறித்த அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவர்மீது வழக்குகள் பதியப்பட்டன. கடந்த ஆண்டில் இந்த வழக்கு தொடர்பாக கேரளாவில் பதுங்கியிருந்த இவரை போலீசார் கைது செய்தனர்.

பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு
தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட இவர் பின்பு ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழ்க்கு விசாரணைக்கு தொடர்ந்து இவர் ஆஜராகாததையடுத்து இவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து சென்னை சைபர் க்ரைம் போலீசார் இன்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

4ம் தேதிவரை நீதிமன்ற காவல்
வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அவரை வரும் 4ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, நடிகை மீரா மதுன் தரப்பில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











