Meera mithun: டெல்லி மனநல மருத்துவமனையில் மீரா மிதுன்.. காவல்துறை தகவல்!
சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து, ஆகஸ்ட் 11ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, டெல்லியில் பதுங்கி இருந்த மீரா மிதுனை டெல்லி போலீசார் கைது செய்தனர். இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் மீரா மீதுதன் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடல் அழகியான மீரா மீதுன் சர்ச்சைக்குரிய செய்திகளை பகிர்ந்து பிரபலமானார். தமிழ் சினிமாவில் உள்ள பட்டியலின இயக்குநர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை வெளியேற்ற வேண்டும் என்றும் சாதி வெறியுடன் பேசி இருந்தார் மீரா மிதுன். அவரது இந்த வீடியோ பரபரப்பை கிளப்பிய நிலையில் அவர் மீது தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் பதிவானது. விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க என புகார் அளித்தார்.

நடிகை மீரா மிதுன்: அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின் புழல் சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுன், ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின் நேரில் ஆஜராகாமல், போலீசாருக்கே சவால் விட்டு தலைமறைவானார்.
டெல்லியில் கைது: மீரா மிதுன் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் அவரை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஆகஸ்ட் 11 ஆம் தேதி மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, டெல்லியில் இருந்த மீரா மிதுனை டெல்லி போலீசார் கைது செய்து காப்பகத்தில் வைத்துள்ளனர்.
மனநல காப்பகத்தில் மீரா மிதுன்: இந்நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில், வழக்கறிஞர் சுதாகர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், நடிகை மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும், அவரை சென்னை அழைத்துவர இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், உடல் நலம் மேம்பட்டு, பயணத்திற்குத் தகுதியானவர் என மருத்துவர்கள் சான்றளித்ததும், நேரில் ஆஜர்படுத்துவதாகவும் கூறி காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வழக்கை தள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications











