Megha Akash: கல்யாணத்துக்கு அப்புறம் நடிப்பை தொடர்வாரா.. மேகா ஆகாஷோட பிளான் இதுதான்!
சென்னை: நடிகை மேகா ஆகாஷ் அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த மேகா ஆகாஷ் அடுத்தடுத்து சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக மழை பிடிக்காத மனிதன் படத்திலும் மேகா ஆகாஷ் நடித்திருந்தார்.
இந்நிலையில் மேகா ஆகாஷ் நடிகர் சாய் விஷ்ணுவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 15ம் தேதி இவரது திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை மேகா ஆகாஷ்: தன்னுடைய முதல் படத்திலேயே நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை மேகா ஆகாஷ். தொடர்ந்து சிம்பு ஜோடியாக வந்தா ராஜாவா தான் வருவேன் தனுஷ் ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், யாதும் ஊரே யாவரும் கேளிர், வடக்குப்பட்டி ராமசாமி என பல படங்களில் நடித்துள்ளார் மேகா ஆகாஷ். சமீபத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
மேகா ஆகாஷ் நிச்சயதார்த்தம்: தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார் மேகா ஆகாஷ். தற்போது தெலுங்கில் பெயரிடப்படாத இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் நடிகர் சாய் விஷ்ணுவுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக புகைப்படங்களுடன் தகவலை பகிர்ந்துள்ளார் மேகா ஆகாஷ். இவர்கள் இருவரும் பேசினால் போதும் அன்பே என்ற குறும்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் மேகா. சாய் விஷ்ணுவை கடந்த 9 ஆண்டுகளாக தனக்கு தெரியும் என்றும் தன்னுடைய நெருங்கிய தோழியின் சகோதரரான அவரை தான் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் சாய் விஷ்ணுவை மணக்கிறார்: நியூயார்க்கில் ஃபிலிம் மேக்கிங் படித்துள்ளார் சாய் விஷ்ணு. பா ரஞ்சித்தின் காலா, கபாலி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் சாய் விஷ்ணு. அவருக்கு எப்போதுமே சினிமா மீதுதான் ஆர்வம் அதிகம் என்ற போதிலும் தற்போது பிசினசை கவனித்து வருவதாகவும் மேகா ஆகாஷ் கூறியுள்ளார். நிச்சயதார்த்தம், திருமணம் உள்ளிட்ட அனைத்தையுமே தான் முன்னதாக சரியான திட்டமிடலுடன் எதிர்கொண்டதாக கூறியுள்ளார். தற்போதே தனது திருமணத்திற்கான ஆடைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நடிப்பேன்: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தான் சினிமாவில் தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார். திருமணம் ஆகிவிட்டால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு நடிகைக்கு கிடைப்பதில்லை என்பதெல்லாம் தற்போது கிடையாது என்றும் திருமணம் ஆகியும் பல நடிகைகள் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருவதாகவும் மேகா கூறியுள்ளார். மேகா ஆகாஷின் திருமணம் வரும் செப்டம்பர் 15ம் தேதி நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











