4 கோடி போச்சு.. வீடு இல்லாமல் நடுத்தெருவில் நின்றோம்.. நடிகை நீலிமா ராணி பேச்சு!
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரை தொடர்களில் வில்லி, ஹீரோயினாக நடித்து அசத்தி வருபவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, ஆகஸ்ட் 1947 போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பணத்தை தொலைத்து அதில் இருந்து மீண்டு வந்தது குறித்து மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசி இருந்தார்.
கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நடிகை நீலிமா ராணி, நான் என்னுடைய ஆறு வயதில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தேன். தேவர்மகன் திரைப்படத்தில் நாசரின் மகளாக நான் நடித்திருந்தேன். 1992ம் ஆண்டில் இருந்து என்னுடைய சினிமா பயணம் தொடங்கியது. கடவுளின் ஆசிர்வாதத்தால் தற்போது வரை என்னுடைய சினிமா பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நடிகை நீலிமா ராணி: என்னுடைய 21ஆவது வயதில் இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு திருமணம் ஆன ஆறு மாதத்தில் என்னுடைய தந்தை இறந்துவிட்டார். இது மிகப்பெரும் பேரிழப்பாகவே எனக்கு இருந்தது. அந்த இழப்பிலிருந்து என்னால் மீண்டு வரவே முடியவில்லை. இதற்காக நான் நிறைய கோயில்களுக்கு சென்றேன், நிறைய புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்து, மேலும் பல விஷயத்தில் என் கவனத்தை செலுத்தி அதில் இருந்து மீண்டு வந்தேன்.

4கோடி போச்சு: 2017ம் ஆண்டு நானும் எனது கணவரும் சேர்ந்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டு, அந்த படத்தின் மொத்த மதிப்பு மட்டும் நான்கு கோடி ரூபாய், இதற்காக வெளியில் வட்டிக்கு பணம் வாங்கி அந்த படத்தை தயாரித்தோம். ஆனால், அந்த படத்தை குப்பையில் போடும் அளவுக்கு தான் இருந்தது. அதனால் நாங்கள் சேர்த்து வைத்த மொத்த பணமும் போய்விட்டது. அதன் பிறகு நானும் என் கணவரும் ஒரு முடிவெடுத்து நடந்தது நடந்துவிட்டது, எனஅதிலிருந்து மீண்டு வர ஆரம்பித்தோம். நான் மீண்டும் வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் போன்ற தொடர்களில் நடித்தேன். அதன் பிறகு தான் வாடகை வீட்டில் ஒன்றில் குடியேறினோம். அதுவரை வாடகை வீட்டுக்கு கூட செல்ல வழியில்லாமல் என்னுடைய நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்தோம் . எங்களுடைய குறிக்கோள் வெற்றி பெற வேண்டும் என்று இருந்ததால், தோல்வியையும் பரவா இல்லை என்று ஏற்றுக் கொண்டதால், எங்களால் மீண்டும் அந்த இடத்தை அடைய முடிந்தது.

எண்ணம் போல் வாழ்க்கை: 2017ம் ஆண்டு மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்றென்றும் புன்னகை, நிறம்மாறாத பூக்கள், சீரியலை தயாரித்தோம். என்னுடைய குறிக்கோள் சினிமா தயாரிப்பதாக இருந்தாலும், முதலில் சீரியலில் இருந்து பயணத்தை தொடங்கினோம் என்றாவது ஒரு நாள் நிச்சயம் படத்தை தயாரிப்போம். எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வார்கள், அது எந்த அளவிற்கு உண்மை என்பதை அனுபவிக்கும் போது தான் தெரியும். இதனால், என்னவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். செல்போனை கையில் வைத்து கொண்டு ரீல்சை பார்த்துக் கொண்டு இருப்பதால், நேரம் தான் செலவாகுமே தவிர நம்மளால் சுயமாக எதையுமே சிந்திக்க முடியாது. இதனால் செல்போனை தவிர்த்து விட்டு உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் என்று நீலிமா ராணி அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











