கோவிலுக்கு சொந்தமான பாம்பு படகில் செருப்புடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகை கைது.. குவியும் கண்டனம்!
திருவனந்தபுரம்: கோவிலுக்கு சொந்தமான பாம்பு போன்ற படகில் செருப்புடன் ஏறி போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகைக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
பிரபல மலையாள டிவி நடிகை நிமிஷா பிஜோ. சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக உள்ள நிமிஷாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை நிமிஷா சர்ச்சை ஒன்றில் சிக்கி கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

கோவிலுக்கு சொந்தமான பாம்பு படகு
அதாவது நடிகை நிமிஷா பிஜோ அரன்முலா கோவிலுக்கு சொந்தமான பாம்பு படகில் செருப்புடன் ஏறி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். பெண்களுக்கு அனுமதி இல்லாத அந்த படகில் நிமிஷா பிஜோ, காலில் செருப்பு அணிந்தப் படியும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டிஷர்ட் அணிந்தப்படியும் அவரது நண்பர் உன்னியுடன் பாம்பு படகில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

போட்டோ ஷூட் - நடிகை கைது
இந்த போட்டோக்களை நிமிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்ததை தொடர்ந்து இந்த சம்பவம் பூதாகரமானது. இதையடுத்து ஆலயத்தின் புனிதத்தை மீறியதற்காகவும், பாரம்பரியத்தை மீறியதற்காகவும் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட போலீசாரால் செப்டம்பர் 10 ஆம் தேதி நடிகை நிமிஷாவும் அவரது நண்பர் உன்னியும் கைது செய்யப்பட்டனர்.

பெண்களுக்கு தடை விதிப்பு
இந்த படகுகள் பள்ளியோட புரா என்ற சிறப்பு கொட்டகைகளில் வைக்கப்பட்டுள்ளன, அங்கு வெளியாட்களின் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கோவிலுக்குள் சென்று கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் தனிப்பட்ட பத்திரங்களை வழங்கியதை தொடர்ந்து நிமிஷா பிஜோ மற்றும் உன்னி காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

எதிர்ப்புகள் - போட்டோக்கள் நீக்கம்
திருச்சூர் சாலக்குடியைச் சேர்ந்த நடிகை நிமிஷா, படகின் வழக்கம் பற்றி தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்த போட்டோக்கள் வைரலானது. மதம் மற்றும் பாரம்பரியத்தை அவமதித்ததற்காக அவர் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தனக்கு பல அச்சுறுத்தல் அழைப்புகள் கூட வந்ததாக நிமிஷா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து நிமிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது போட்டோக்களை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரன்முலா கோவிலின் பள்ளியோடம்
பம்பா நதியில் ஒரு புகழ்பெற்ற நீர் ஊர்வல விசேஷத்திற்காக ஆரன்முலா கோவிலின் பள்ளியோடம் பயன்படுத்தப்படுகிறது. புராணங்களின்படி, பாம்புகள் நிறைந்த இந்த படகுகள் பகவான் கிருஷ்ணரால் வடிவமைக்கப்பட்டவை என நம்பப்படுகிறது. இவை விஷ்ணு பாம்புகளின் மீது ஓய்வெடுப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகுகள் வேதங்களில் அறிவுறுத்தப்பட்ட முறைகளின்படி ஒரு வகையான பலா மரத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆரன்முலாவில் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக ஊர்வலத்தில் பங்கேற்கும் இதுபோன்ற 52 படகுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











