நீட் தேர்வால் என் குடும்பத்திலும் தற்கொலை நிகழ்ந்திருக்கிறது... பிரபல நடிகை பகிர்ந்த பகீர் தகவல்!
சென்னை: நீட் தேர்வால் தன்னுடைய குடும்பத்திலும் ஒரு தற்கொலை நிகழ்ந்திருப்பதாக பிரபல நடிகையான சாய் பல்லவி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
எதார்த்தமான நடிப்பு, அசத்தலான நடனம் என தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

ரவுடி பேபி பாடல் சாதனைகள்
தமிழில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்தார் நடிகை சாய் பல்லவி. இதில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலில் இவர் ஆடிய நடனம் பட்டிதொட்டியெங்கும் பிரபலம். அந்தப் பாடல் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.

நீட் தேர்வால் தற்கொலை
அந்த பாடலுக்கு பிறகு ரவுடி பேபி என்றே அழைக்கப்பட்டு வருகிறார் சாய் பல்லவி. இந்நிலையில் நீட் தேர்வால் தன்னுடைய குடும்பத்திலும் ஒரு தற்கொலை நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி. நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து பேசியுள்ளார் சாய் பல்லவி.

மருத்துவ படிப்பு கடல் போன்றது
அவர் பேசியிருப்பதாவது, மருத்துவப் படிப்பு என்பது ஒரு கடல் போன்ற படிப்பு. இதில் தேர்வின்போது எதிலிருந்து கேள்விகள் வரும் என்று சொல்ல முடியாது. அதனால் மனதளவில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். பெற்றோர்களும் நண்பர்களும் தான் மாணவர்களுடன் பேசி நம்பிக்கை கொடுக்க வேண்டும்.

என் குடும்பத்திலும் தற்கொலை
என் குடும்பத்திலும் நீட் தற்கொலை நிகழ்ந்திருக்கிறது. மதிப்பெண் குறைந்து விட்டதால் எனது உறவினர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இத்தனைக்கும் அவர் மோசமான மதிப்பெண் எடுக்கவில்லை. நல்ல மதிப்பெண் தான் எடுத்திருந்தார். ஆனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விட்டது. அதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்துவிட்டார்.

அவர்களுக்கு தான் வலி தெரியும்
தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று என்னால் எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். அந்த தேர்வை அவர்கள் எந்த நிலையில் இருந்து எழுதினார்கள் என்று பார்க்க வேண்டும்.

18 வயது கூட ஆகாத மாணவர்கள்
பதினெட்டு வயது கூட ஆகாத மாணவர்கள் இவ்வளவு இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது வேதனை அளிக்கிறது. மாணவர்களின் வலியை உணர்கிறேன். பிரச்சினைகளையும் உணர்கிறேன். நான் எப்போதும் அவர்கள் பக்கம் தான் என்று மாணவர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார் நடிகை சாய் பல்லவி.

ஜார்ஜியாவில் மருத்துவப் படிப்பு
நடிகை சாய் பல்லவி ஒரு மருத்துவர் ஆவார். 2016ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார் நடிகை சாய் பல்லவி. வெளிநாட்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இங்கு மருத்துவராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வு எனும் எஃப்எம்ஜி எனும் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

தேர்வு எழுதிய சாய் பல்லவி
அந்த வகையில் நடிகை சாய் பல்லவி திருச்சி சிறுகனூர் எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் கடந்த ஆண்டு தனக்கான தகுதி தேர்வை எழுதினார். அப்போது சக மாணவர்களுடன் சேர்ந்து அவர் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











