Shruti haasan: தமிழில் எனக்கு கதைகள் பிடிப்பதில்லை.. என்ன ஸ்ருதிஹாசன் இப்படி சொல்லீட்டாங்க!
சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளம் இருந்தபோதிலும் தன்னுடைய சொந்த திறமைகள் காரணமாகவே அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவருகிறார். இடையில் சிறிது காலம் சில பிரச்சினைகளில் சிக்கிய இவர் படங்களில் அதிகமாக நடிக்காத நிலையில் தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.
அடுத்தடுத்து படங்களில் நடிப்பதுடன் தனியாக ஆல்பம் பாடலை உருவாக்குவதிலும், பாடல்களை பாடுவதிலும் அதிகமாக கவனத்தை செலுத்தி வருகிறர் ஸ்ருதிஹாசன். இவரது வாய்சில் காதலிக்க நேரமில்லை பிரேக்கப் பாடல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. இதேபோல இயக்குநர் லோகேஷுடன் இணைந்து இவர் நடித்திருந்த இனிமேல் ஆல்பம் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

நடிகை ஸ்ருதிஹாசன்: நடிகை ஸ்ருதிஹாசன் சூர்யா, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ள நிலையில், தமிழ், தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக கூலி படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் தற்போது நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்தது குறித்து உற்சாகம் தெரிவித்திருந்தார்.
ஸ்ருதிஹாசன் பேட்டி: இந்நிலையில் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்துவரும் ஸ்ருதிஹாசன், சமீபத்திய பேட்டியில் தன்னை வலிமையாக்கியது கடவுள் நம்பிக்கைத்தான் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த நம்பிக்கை தன்னுடைய பெற்றோரிடம் இருந்து வந்தது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடவுள் நம்பிக்கை இல்லாத கமல்ஹாசனின் மகளிடம் இருந்து இத்தகைய பதில் வந்தது குறித்து ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கடவுள் சக்தியை தான் நம்புவதாகவும் இந்த சக்தி தன்னை வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களுக்கு அழைத்து சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழில் கேரக்டர்கள்: இந்நிலையில் தமிழில் தனக்கு பிடித்தமான கதைக்களங்கள் கிடைப்பதில்லை என்றும் அழுத்தமான கதைகள் கிடைக்காததால்தான் தான் தொடர்ந்து தமிழில் நடிப்பதில்லை என்றும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருவதால் இந்தப் படம் அவருக்கு அழுத்தமான கேரக்டரை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக தன்னுடைய பேட்டியொன்றில் தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவின் புகழை சில நேரங்களில் சுமையாக உணர்ந்ததாக கூறியிருந்தார். கமலின் மகள் என்ற இமேஜை தான் விரும்பவில்லை என்றும் தனக்கான சொந்த அடையாளம் வேண்டும் என்று நினைத்ததாகவும் அதற்காக தான் தனியாக ஒரு பெயரை உருவாக்கியதாகவும் ஸ்ருதி கூறியிருந்தார்.
மும்பைக்கு குடிபெயர்ந்த காரணம்: தன்னுடைய அப்பா மற்றும் அம்மா இருவரும் பிடிவாதமான நபர்களாக இருந்ததாகவும் இவர்களிடம் வளர்ந்தது தன்னையும் தன்னுடைய தங்கையையும் பெரிதாக பாதித்ததாகவும் அதனால் சென்னையில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்ததாகவும் கூறியிருந்தார் ஸ்ருதிஹாசன். சென்னைக்கு வெளியில் வாழ்க்கையை அனுபவிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்திருந்தார். சென்னையில் வாழ்வதை தான் வெறுத்ததாகவும் ஸ்ருதி கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











