புதுச்சேரி சிறுமி கொலை.. நம்முடன் மிருகங்கள் வசிக்கின்றன.. நடிகை சோனா வேதனை!
சென்னை: புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை சோனா, நான் நடிகை, திரைபிரபலம் என்றாலும் நானும் என் சக ஊழியர்களும் கூட இதுபோன்ற காட்டுமிராண்டித்தன நிகழ்வுகளை எதிர்கொண்டு மீண்டிருக்கிறோம் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, நம்முடன் மிருகங்கள் வசிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
புச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த வாரம் திடீரென காணாமல் போனார். இதையடுத்து மார்ச் 5ந் தேதி அவரது வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி, அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, 59 வயது மதிக்கத்தாக்க விவேகானந்தன், 19 வயதுடைய கருணா என்ற இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுமியை ஒரு வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் புதுச்சேரியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சோனா: இதுகுறித்து நடிகை சோனா, தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கொடுமை தீராத வேதனையை தருகிறது. ஒரு பெண்ணாக இருப்பதென்றால் என்னவென்று கூட அறியாத வயதுள்ள குழந்தையை இப்படி சிதைத்திருப்பது, நாம் நாகரீக சமூகத்தில்தான் வாழ்கிறோமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
இது தீராத, முடிவடையாத ஓட்டம்: நான் நடிகை, திரைபிரபலம் என்றாலும் நானும் என் சக ஊழியர்களும் கூட இதுபோன்ற காட்டுமிராண்டித்தன நிகழ்வுகளை எதிர்கொண்டு மீண்டிருக்கிறோம் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இதுபோன்ற மிருகங்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பெண்களான நாங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். அது தீராத, முடிவடையாத ஓட்டமாகவே இருக்கிறது. வளர்ந்த சமூகத்திலும் பெண்கள் அடக்கப்படுவதும், இழிவுபடுத்தப்படுவதும் தவறான முத்திரை குத்தப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த கேள்விக்கு பதில் இல்லை.
மௌனம் காத்தது போதும்: இன்னும் எவ்வளவு காலம் மௌனம் காக்கப் போகிறோம்? நாம் குரல் கொடுக்க வேண்டும். இனியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு பேரச்சம் ஏற்படும் வகையில் பெருங்குரலாக அது இருக்க வேண்டும். புதுச்சேரியில் நடந்த கொடுமையை வன்மையாகக் கண்டிப்பதுடன் பெண்களை கொண்டாடும் இந்நாளில் (மார்ச் 8) எனது ஆழ்ந்த இரங்கலை அந்தச் சிறுமியின் குடும்பத்துக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பிஞ்சு நெஞ்சின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என நடிகை சோனா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











