விஜய் படத்தில் நடித்தபோது அவமானம்.. ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அழுகை.. மனம் திறந்த சோனா
சென்னை: தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் சோனா. ஹோம்லி ரோலில் நடித்து சினிமாவில் அவர் பயணத்தை ஆரம்பித்தாலும்; காலம் செல்ல செல்ல அவரை கவர்ச்சி நடிகையாக மாற்றிவிட்டார்கள். குசேலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் அவர்; சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்; விஜய்யின் ஷாஜகான் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை மனம் திறந்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அஜித்குமார், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்தவர் சோனா. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. சோனாவுக்கும் ஓரளவுக்கு வெளிச்சம் கிடைத்தது. அந்தப் படத்துக்கு பிறகு விஜய் ஹீரோவாக நடித்த ஷாஜகான் படத்திலும் ஒரு ரோலை ஏற்றிருந்தார். அப்படமும் ஓரளவுக்கு பெயரை பெற்றது; சோனாவுக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க வழி அமைத்து கொடுத்தது. எப்படியாவது கோலிவுட்டில் பெரிய நடிகையாக வந்துவிட வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தார்.

கவர்ச்சி நடிகை: போகப்போக ஹீரோயின் வேடமே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அவருக்கு; அடுத்தடுத்து கவர்ச்சி வேடங்களே கிடைத்தன. அவரும் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்பதற்காக அவற்றில் தொடர்ந்து நடித்தார். மிருகம், ஸ்வர்ணம், பத்து பத்து உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு குசேலன் படத்தில் வடிவேலுவுக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. வழக்கம்போல் அதிலும் அவருக்கு கிளாமர் ரோலைத்தான் கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தித்த பிரச்னைகள்: நடிப்பு மட்டுமின்றி திரைப்படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபு, எஸ்.பி.பி.சரண் உள்ளிட்டோரிடம் நெருக்கமான நட்பிலும் இருந்தார். ஆனால் ஒரு பார்ட்டியின்போது அவர்கள் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக புகாரளித்து பரபரப்பையும் கிளப்பியிருந்தார். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவன்கூட சினிமாவில் கஷ்டப்பட்டபோது சோனாவின் வீட்டில் தங்கிதான் வேலை செய்துவந்ததாக சிலர் சொல்வதுண்டு.
சோனா பேட்டி: இந்நிலையில் விஜய்யின் ஷாஜகான் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் சோனா. அந்தப் பேட்டியில் அவர், "ஷாஜகான் படம் எனக்கு இரண்டாவது படமாகும். அந்தப் படத்தில் முதலில் என்னிடம் சொல்லப்பட்ட ரோலே வேறு. நீங்கள்தான் இரண்டாவது லீடு ரோல். படம் முழுக்க வருவீர்கள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் ஷூட்டிங்கில் எடுத்ததே வேறு. ஒருமுறை அந்தப் படத்தின் ஹீரோயினோடு நான் அழகாக இருந்துவிட்டேன்.
ஷூட்டிங்கிலேயே அழுதேன்: உடனே இயக்குநர் உள்ளிட்டோர் என்னை அழைத்து, ஹீரோயினைவிடவும் நீ அழகாக இருந்தால் எப்படி ம்மா? என்று கேட்டுவிட்டு தலையை எல்லாம் கலைத்துவிட்டார்கள். அதை பார்த்து நான் அங்கேயே அழுதுவிட்டேன். நான் இயக்குநராகவோ, தயாரிப்பாளராகவோ இருந்தால்கூட ஹீரோயினைவிடவும் ஒரு பெண் அழகாக இருந்தால் அப்படித்தான் செய்வேன். ஆனாலும் அது எனக்கு இரண்டாவது படம். வயது 19தான் இருக்கும். அதனால்தான் அப்படி அழுதேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
