எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.. ராமரை நாம் கொண்டாட வேண்டும்.. சுகன்யா விளக்கம்!
சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை முன்னிட்டு பிரபல நடிகை சுகன்யா ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலை இசையமைத்து பாடி இருந்தார். இணையத்தில் இந்த பாடல் வைரலானதை அடுத்து, சுகன்யா பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து சுகன்யா விளக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில், நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் இணையத்தில் வரவேற்பை பெற்றது. தற்போது கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள வேளையில் என் சிறு பங்களிப்பாக இந்தப் பாடலை சமர்பித்தேன். ராமரின் நாம மகிமை, அவரது பராக்கிரமம், ராமாயண சுருக்கம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் இருந்தது.

நடிகை சுகன்யா பேட்டி: ராமாயண கதையை படித்துவிட்டு நான் உண்மையிலேயே அதில் லாபித்துவிட்டேன். வழிவழியாக வந்த இந்த கதையை இன்றைய சமுதாயத்தினரும் படிக்க வேண்டும் என்றார். மேலும். சிறு வயதிலிருந்தே அனைவரும் வீட்டில் சாமி கும்பிடுவார்கள். ஆகையால் கடவுள் நம்பிக்கை என்பது எல்லோருக்கும் இருக்கிறது. இன்றும் சினிமா படப்பிடிப்பும் பூஜை போட்டு தான் தொடங்கப்படுகின்றன. சிலர் கடவுளை பெரிதாக கும்பிடுவதில்லை என்று சொல்லி விட்டு வீட்டில் பெரிய பூஜை அறைகளை வைத்து சாமி கும்பிடுகிறார்கள். அதை பார்க்கும் போது, இவர்களைப் போல் நாமெல்லாம் பெரிதாக கடவுளை கும்பிடவில்லையே என்று தோன்றும்.
ராமரை நாம் கொண்ட வேண்டும்: இன்று 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இதை உலகமே கொண்டாடி வருகிறது. இதை நாம் கொண்டாடவில்லை என்றால் தான் தவறு. அதன் முன்னெடுக்கத்தான் இந்த பாட்டை நான் பாடினேன். எனக்கும் அரசியலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அரசியலுக்கு வரும் எண்ணம் இதுவரை பிறக்கவில்லை. இனி வருமா என தெரியவில்லை என்று அந்த பேட்டியில் நடிகை சுகன்யா விளக்கமாக பேசினார்.
பிரம்மாண்ட ராமர் கோவில்: உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம்ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலின் கருவறையில் வைக்கப்பட்டிருந்த ராமர் சிலை, சடங்குகள் பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உ.பி ஆளுநர் ஆனந்திபென் பட்டியல், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் முன்னிலையில் சிலை பிரதிஷ்டை பூஜைகள் செய்யப்பட்டது. இந்த பிரம்மாண்ட விழாவில் முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் தரிசனம்: நேற்று முதல் அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலை 3 மணி முதலே திரளான பக்தர்கள் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமரை தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். காலை 7 மணி முதல் 11:30 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











