ஹீரோக்கள் அப்படித்தான்..ஹீரோயின்களை எப்படி ஃபிக்ஸ் செய்வார்கள் தெரியுமா?.. டாப்சி ஓபனா சொல்லிட்டாரே
சென்னை: டாப்சி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்துக்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த அவர் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது நடிப்பில் கடைசியாக டன்கி திரைப்படம் வெளியானது. சூழல் இப்படி இருக்க மத்யாஸ் போ என்பவரை டாப்சி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் டாப்சி. அந்தப் படம் மெகா ஹிட்டானதை அடுத்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்தன. அதன்படி அவர் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தெலுங்கில் டாப்சி: மேலும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனையடுத்து பேபி என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமான அவருக்கு பிங்க் படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. பிங்க் படத்துக்கு பிறகு ரன்னிங் ஷாதி, ஜுட்வா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பயோபிக்கில் டாப்சி: அவரது ஹிந்தி கரியரில் பிங்க் படத்துக்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது சபாஷ் மிது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. படத்தில் மிதாலி ராஜாக டாப்சி நடித்து பலரிடமும் அப்ளாஸை அள்ளினார். அவர் கடைசியாக டன்கி படத்தில் நடித்திருந்தார். ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
காதல்: இதற்கிடையே டாப்சி டென்மார்க்கை சேர்ந்த முன்னாள் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போ என்பவரை காதலித்துவந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்களாக இரண்டு பேரும் காதலித்து வந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் நடைபெற்றது. திரையுலகை சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலும் அழைப்பு விடுக்கப்படவில்லை. தங்களுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள் இரண்டு பேரும்.
டாப்சி பேட்டி: டாப்சி கடைசியாக டன்கி மற்றும் ஜுட்வா 2 படங்களில் நடித்தார். அதில் நடித்தபோது தனது சம்பளத்தை அவர் கணிசமாக உயர்த்திவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "தங்கள் படத்தில் ஹீரோயின் யார் என்பதை ஹீரோக்கள்தான் இப்போது முடிவு செய்கிறார்கள். இது தெரிந்த விஷயம்தான். அவர்களைப் பொறுத்தவரை தங்களது படங்களில் இப்போதைக்கு ட்ரெண்டிங்கில் எந்த ஹீரோயின் இருக்கிறார், அதிகப் பேரை யார் ஈர்க்கிறார் என கவனித்து அவர்களைத்தான் நடிக்க வைக்க நினைப்பார்கள்.
இன்னும் சிலர்: அதேபோல் இன்னும் சிலரோ தங்களை விட புகழில் சின்ன இடத்தில் இருக்கும் நடிகைகளைத்தான் நடிக்க வைக்க விரும்புவார்கள். மேலும் டன்கி மற்றும் ஜுட்வா 2 படங்களில் பணத்துக்காக நான் நடித்ததாக மக்கள் நினைக்கிறார்கள். சம்பளத்தையும் ஏற்றிவிட்டதாக சிலர் சொன்னார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. அந்தப் படக்குழுவிடமிருந்து நான் அதிக சம்பளம் பெறவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











