சீரியல் இயக்குநர் மீது குற்றம் சாட்டிய நடிகை.. மலையாள சின்னத்திரைக்கும் பரவும் பாலியல் குற்றசாட்டு!
திருவனந்தபுரம்: கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 17 நடிகர்கள் ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து இந்த விஷயத்தில் அடுத்தடுத்த விஷயங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
நடிகர்கள் டோவினோ தாமஸ், பிரித்விராஜ் சுகுமாரன போன்றவர்கள் இந்த விஷயத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரித்விராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். டோவினோ தாமசோ, மலையாள திரையுலகில் மட்டுமே இந்த பிரச்சினை இல்லை என்றுள்ளார். இதே கருத்தை பிரபல நடிகை ஊர்வசியும் தெரிவித்துள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை: ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி சில தினங்களில் கேரள திரையுலகமே பற்றி எரிந்து வருகிறது. கேரள திரையுலகில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளையடுத்து கடந்த 2017ம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி கடந்த 2019ம் ஆண்டிலேயே தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்து விட்டது. ஆயினும் இந்த அறிக்கையை வெளியிட தடை இருந்த காரணத்தால் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கமிட்டியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்விராஜ் கண்டனம்: ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேரள முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து தங்களது கருத்துக்களையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். பல பாலியல் குற்றச்சாட்டுகள் தற்போது வெளிச்சத்திற்கு வர துவங்கியுள்ளன. பலரும் தாங்களும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது வாய் திறந்து வருகின்றனர். இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மிகப்பெரிய தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் தெரிவித்துள்ளார். அதேபோல தவறாக குற்றம் சாட்டியவர்களும் தண்டனைக்கு உரியவர்களே என்று அவர் கூறியுள்ளார்.
நடிகர்கள் பேச்சு: இதனிடையே நடிகர் டோவினோ தாமஸ் மலையாளத் திரையுலகத்தில் மட்டுமே இது போன்ற பிரச்சனைகள் இருப்பதாக சித்தரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இங்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இந்த விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதே கருத்தை தான் நடிகை ஊர்வசியும் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி திரைப்பட உலகத்திலும் இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் சின்ன திரையிலும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சீரியல் இயக்குநர் மீது குற்றச்சாட்டு: நடிகை தாரா லட்சுமி சீரியல் இயக்குநர் சுதீஷ் சங்கர் மீதான தன்னுடைய பாலியல் குற்றச்சாட்டை குறின்குளம் காவல்நிலையத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் தன்னை ஆடிஷனுக்காக வரவழைத்து தன்னுடைய கேரக்டர் குறித்து பேசாமல், தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டதாக தாரா லட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். தான் புரியாமல் முழித்த நிலையில் தன்னுடைய கையை அவர் இறுக்கமாக பற்றி கொண்டதாகவும் இதையடுத்து அவரை பிடித்து தள்ளிவிட்டு தான் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரைக்கும் பரவிய குற்றச்சாட்டு: இந்த விஷயம் குறித்து தான் அப்போதே காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் ஆனால் இயக்குனர் தரப்பில் சமரசம் பேசப்பட்ட நிலையில் தன்னுடைய குடும்பத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் இந்த விஷயத்தில் புகார் அளிக்காமல் விலகி விட்டதாகவும் தாரா லட்சுமி தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் வெளியாகியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு இன்னும் விடை காணப்படாத நிலையில் தற்போது இந்த விவகாரம் சின்னத்திரைக்கும் வந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் அடுத்தடுத்த நாட்களில் அடுத்தடுத்த புகார்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











