ஊர்வசியின் முதல் கணவருக்கு பிறந்த மகள்.. சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறாராம்.. குவியும் வாழ்த்து!
கொச்சி: நடிப்பு ராட்சசி என கமல்ஹாசனே பாராட்டிய நடிகை ஊர்வசியின் மூத்த மகள் தேஜலக்ஷ்மி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக போவதாக மலையாளத் திரை உலகில் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக 1979 ஆம் ஆண்டு வெளியான கதிர் மண்டபம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ஊர்வசி.
மலையாளத் திரை உலகில் பல படங்களில் நடித்து வந்த ஊர்வசியை தமிழில் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் அறிமுகப்படுத்தினார். 1983 ஆம் ஆண்டு கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் எல்லாம் அவரது நடிப்பை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஊர்வசிக்கு 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகளாக தேஜலட்சுமி பிறந்தார்.
முதல் கணவருடன் விவாகரத்து: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகை ஊர்வசி 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு தனது கணவர் மனோஜை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு, சென்னையை சேர்ந்த கட்டுமான தொழில் அதிபர் சிவ பிரசாத் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் உள்ளார்.

சினிமாவில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்: அம்மாவைப் போலவே மலையாள சினிமாவில் ஊர்வசியின் மூத்த மகள் தேஜலக்ஷ்மி ஹீரோயினாக அறிமுகம் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 'சுந்தரியாயவள் ஸ்டெல்லா' எனும் படத்தில் நடிக்கப்போவதாகவும் ஜூன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சர்ஜனோ காலித் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று, ஜூன் 11ஆம் தேதி கொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகை ஊர்வசியின் மகள் சினிமாவில் அறிமுகம் ஆவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அப்பா ரொம்ப ஹேப்பி: தளபதி, தூள், திருமலை, ஜனா, திருப்பாச்சி, திருட்டுப் பயலே, திமிரு, வில்லு, பில்லா 2 பல தமிழ் படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் தனது மனைவி ஊர்வசியை 2008 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆஷா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். தனது மூத்த மகள் தேஜலக்ஷ்மி ஹீரோயினாக போவதை அறிந்த மனோஜ் தான் ரொம்பவே பெருமைப்படுவதாகவும், கண்டிப்பாக சினிமாவில் பெரிய நட்சத்திரமாக தனது மகள் மாறுவார் என்றும் கூறி மகிழ்ந்துள்ளார். மலையாளத் திரையுலகில் ஏற்கனவே பல பிரபலங்களின் மகள்களும் மகன்களும் வாரிசு நடிகர்களாக அறிமுகமாகி வரும் நிலையில், ஊர்வசியின் மகளும் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.


Click it and Unblock the Notifications











