பெண்கள் என்ன கறவை மாடா.. என்ன பாட்டு இது? நான் நடிக்கவே மாட்டேன் அடம் பிடித்த ஊர்வசி!
சென்னை: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் நடிகை ஊர்வசி. கேரளவில் பிறந்த ஊர்வசி, 1979ஆம் ஆண்டு 'கதிர் மண்டபம்' மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அன்றில் இருந்து கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். மகளிர் மட்டும் படத்தில் வரும் கறவை மாடு ஒன்று பாடலில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
பாக்யராஜ் இயக்கி 'முந்தானை முடிச்சு' படத்தில் பரிமளம் என்கிற ரோலில் நடித்த ஊர்வசிக்கு சினிமாவில் ஒரு நல்ல எதிர்காலம் அமைந்தது. அந்த படத்தைத் தொடர்ந்து, அபூர்வ சகோதரிகள், தாவணி கனவுகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், என அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்தார். 1984 ஆம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் 15 படங்கள் வெளியானது. அந்த அளவிற்கு பிஸியான நடிகையாக இருந்தார் ஊர்வசி.

கறவை மாடு: அண்மையில் ஊர்வசி யூடியூப் சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் மகளிர் மட்டும் படத்தில் வரும் கறவை மாடு மூனு... காளை மாடு ஒன்று என்ற பாடலை கேட்டதும், நான் ரேவதியிடம் அது என்ன கறவை மாடு, எதுக்கு பெண்களைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதில் நான் நடிக்க மாட்டேன் என்று இயக்குநரிடம் சென்று சொல்லிவிட்டேன். அப்போது, அவர் அந்த பாடலுக்கு அர்த்தம் அது இல்லை. குடும்பத்திற்கான ஓடாக உழைக்கும் பெண்களை பற்றியது, அதைத்தான் பாடலில் வாலி எழுதி இருக்கிறார் என்று சொன்னார். நான் இப்படி நடிக்க மாட்டேன் என்று சொன்ன விஷயம் வாலி சாரின் காதுக்கு போனது. அதன் பிறகு அவர், காதலன் படத்தில் ஊர்வசி ஊர்வசி டேக்கிட் ஈஸி ஊர்வசி என பாடல் எழுதி என்னை சமாதானப்படுத்தினார் என்று அந்த பேட்டியில் ஊர்வசி கூறியிருந்தார்.
சூப்பர் ஹிட் திரைப்படம்: மகளிர் மட்டும் திரைப்படம், 1994 ம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இப்படத்தில், நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடித்திருந்தனர். இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார், கமல்ஹாசன் தயாரித்திருந்தார். திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய இப்படம், தெலுங்கு, மலையாள மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தி மொழியில் லேடீஸ் ஒன்லி என்ற பெயரில் எடுக்கப்பட்டு பாதியிலேயே படம் கைவிடப்பட்டது.


Click it and Unblock the Notifications











