மூன்று நாளில்.. மூன்று மாநிலத்தில்.. மூன்று நடிகைகள் மர்ம மரணம்.. ஷாக்கான திரையுலகம்!
கொச்சி: கேராளாவை சேர்ந்த ஷெர்லின் செலின் மேத்யூ எனும் திருநங்கை நடிகை தனது வாடகை வீட்டில் மர்மமான முறையில் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்காள நடிகை, கன்னட நடிகை மற்றும் கேரளாவை சேர்ந்த திருநங்கை நடிகை என தொடர்ந்து மூன்று நாட்களில் மூன்று இளம் நடிகைகள் இறந்திருப்பது சினிமா உலகத்தை மட்டுமல்ல பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
21 வயது முதல் 26 வயது என உயிரிழந்த நடிகைகள் அனைவருமே இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநங்கை மரணம்
கொச்சியில் உள்ள சக்கரப்பரம்பு எனும் இடத்தில் வாடகை வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்த திருநங்கை மாடல் மற்றும் நடிகை ஷெர்லின் செலின் மேத்யூ மே 17ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தது கேரள திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஷெர்லின் சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்தார் என அவரது நண்பர்கள் கூறிய நிலையில், தற்கொலை என ஆரம்பக் கட்டத்தில் பதிவு செய்துள்ள போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிறந்தநாளில் தற்கொலை
கடந்த மே 12ம் தேதி கேரளாவின் கோழிகோடு பகுதியை சேர்ந்த இளம் மாடல் அழகி சஹானா என்பவர் தனது பிறந்தநாள் அதுவுமாக தனது வீட்டிலேயே இறந்து கிடந்த அதிர்ச்சி சம்பவமும் சமீபத்தில் கேரள திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணமும் தற்கொலை என்றே கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வங்காள நடிகை தற்கொலை
கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 15ம் தேதி காலை கொல்கத்தாவில் உள்ள தனது வாடகை வீட்டில் வங்காள டிவி நடிகை பல்லாபி தே எனும் 25 வயது இளம் நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நண்பருடன் வசித்து வந்த பல்லாபி தே திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னட நடிகை மரணம்
மே 16ம் தேதி முகத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட கன்னட நடிகை சேத்தனா ராஜ் மே17ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததன் விளைவு தான் மகள் இறக்க காரணம் என மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான விசாரணையை பெங்களூரு போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். தொடர்ந்து இளம் நடிகைகள் அடுத்தடுத்து மரணித்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மன அழுத்தம்
நடிகர்கள் மற்றும் நடிகைகள் தற்கொலை செய்து கொள்ள முக்கிய காரணமே மன அழுத்தம் தான் எனக் கூறப்படுகிறது. இளம் நடிகைகள் சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என வந்து விட்டு இப்படி இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வது தவறான விஷயம் என்றும், மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக மனநல மருத்துவரை அணுக வேண்டும் என்றும் பெற்றோர் மற்றும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களிடம் உங்களின் பிரச்சனை பேசி தீர்த்தாலே இதுபோன்ற முடிவுக்கு வரமாட்டீர்கள் என்று தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











