சிவகார்த்திகேயனால் ஹீரோவுக்கு மட்டுமே கிடைப்பது ஐஸ்வர்யாவுக்கும் கிடைத்துள்ளது
Recommended Video

சென்னை: ஹீரோக்களுக்கு மட்டுமே கிடைப்பது ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் கிடைத்துள்ளது.
அருண்ராஜா காமராஜ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள கனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார். படத்தின் ஹீரோ, ஹீரோயின் இரண்டுமே ஐஸ்வர்யா தான்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

கனா
நான் ஆர்வக்கோளாறில் கனா படத்தில் நடிக்க முன் வந்தேன். சிவகார்த்திகேயன் எனக்கு மெசேஜ் அனுப்பி கிரிக்கெட் விளையாடத் தெரியுமா என்று கேட்டார். நான் இல்லை என்று பதில் அளித்தேன். எதற்காக கேட்கிறீர்கள் என்று நான் கேட்டதற்கு புதுப்படத்தில் கிரிக்கெட் விளையாடத் தெரிந்த நடிகை வேண்டும் என்றார். நான் கிரிக்கெட் கற்றுக் கொள்கிறேன் என்று அவரிடம் கூறியதற்கு இது ஒன்றும் காமெடி இல்லை என்றார்.

நடிகை
கிரிக்கெட் விளையாடத் தெரிந்த நடிகையை தேடிக் கொண்டிருப்பதாக அருண்ராஜா அறிவிப்பு வெளியிட்டார். நண்பர் மூலம் அருண்ராஜாவின் செல்போன் எண்ணை வாங்கி அவரை தொடர்பு கொண்டு கதை சொல்ல முடியுமா என்று கேட்டேன். அவர் கதை சொன்னதுமே எனக்கு பிடித்துவிட்டது. எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கள், நான் சரிப்பட்டு வராவிட்டால் என்னை நீக்கிவிடலாம் என்று நான் அருண்ராஜாவிடம் கூறினேன்.

ஸ்போர்ட்ஸ் படம்
நான் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள். அதனால் விளையாட்டு தொடர்பான படத்தில் நடிக்க விரும்பினேன். இதையடுத்து சென்னையில் கிரிக்கெட் பயிற்சியை துவங்கினோம். முதலில் பந்தை பிடிக்கக் கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் கற்றுக் கொண்டேன். என்னால் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க முடியும் என்று அருண் நம்பினார். படப்பிடிப்புக்கு வரும் முன்பு 2 மாதம் பயிற்சி எடுப்பேன் என்று அவருக்கு வாக்குறுதி அளித்தேன்.

படப்பிடிப்பு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பை துவங்கினோம். நான் தினமும் காலை, மாலையில் 2 மணிநேரம் பயிற்சி எடுத்தேன். ஒரு மாதம் கழித்து சிவா வந்து சில பரிந்துரைகள் செய்தார். பயிற்சியாளர்கள் தவிர்த்து படக்குழுவில் கிரிக்கெட் விளையாடத் தெரிந்த அனைவரும் எனக்கு உதவி செய்தார்கள்.

மாஸ் காட்சிகள்
படத்தில் எனக்கு சில மாஸ் காட்சிகள் உள்ளன. வழக்கமாக ஹீரோக்களுக்கு தான் அத்தகைய காட்சிகள் கிடைக்கும். அப்படிப்பட்ட காட்சிகளில் நடித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் என்னுடைய பிற படங்களிலும் மாஸ் காட்சிகளில் நடிக்க விரும்புகிறேன். என் சினிமா பயணத்தை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

பட வாய்ப்பு
காக்கா முட்டை படத்தில் மணிகண்டன் எனக்குள் இருந்த திறமையை வெளிக்கொண்டு வந்தார். வெற்றிமாறன், மணிரத்னம், கவுதம் மேனன், அருண் ராஜா என்று வித்தியாசமான இயக்குனர்களுடன் வேலை செய்துள்ளேன். தற்போது கோலிவுட்டில் தமிழ் பேசும் நடிகைகளுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்து வருகிறது. நான் 6 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ளேன். ஒரு வழியாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது வெறும் 30 சதவீதம் தான் என்கிறார் ஐஸ்வர்யா.


Click it and Unblock the Notifications











